ஏக்கர் கணக்கில் நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்தாலும், காலம் என்னவோ... பற்றாக்குறை பட்ஜெட்தான் போடுகிறது. இதற்கு, ஆட்கள் பற்றாக்குறை உள்பட ஏகப்பட்டக் காரணங்கள் இருக்கின்றன. இதன் காரணமாகவே பலரும் நிலத்தைத் தரிசாகக் கூட போட்டு வைத்துவிடும் கொடுமையும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே... 'ஒரு ஏக்கர் நிலத்திலுள்ள நாட்டு ரக எலுமிச்சைச் செடிகள் மூலமே லட்சத்துக்கு மேல் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறது சின்னச்சாமி-ஜெயபாரதி தம்பதி' எனும் செய்தி காதில் விழுந்தால்... தெம்பு கூடுவதாகத்தானே இருக்கும்!திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களில் ஒன்று மூலனூரை அடுத்த நாரணாவலசு. இங்கேதான் இருக்கிறது அந்தத் தம்பதியின் எலுமிச்சைத் தோட்டம்.''வாங்க, வீட்டுக்காரரு டவுன் வரைக்கும் போயிருக் காரு'' என்றபடியே வரவேற்ற ஜெயபாரதி, தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே பச்சைக் குடை விரித்து படர்ந்து நின்றன எலுமிச்சை மரங்கள். மஞ்சள் பொட்டுக்களாக தரை முழுவதும் உதிர்ந்து கிடந்தன எலுமிச்சம் பழங்கள். அவற்றையெல்லாம் சேகரித்தபடியே...''இது மொத்தமும் நாட்டு ரக எலுமிச்சைதான். எங்க வீட்டுக்காரரோட தாத்தா, நூறு வருஷத்துக்கு முன்ன எங்கிருந்தோ ரெண்டு செடிகளைக் கொண்டு வந்து நட்டு, அதுல கிடைச்ச காய்கள கோயில் காரியம், வீட்டு விசேஷம், வைத்தியம்னு கேட்டவங்களுக்கு இலவசமா கொடுத்திருக்காங்க. அவருக்குப் பின்னால எங்க மாமனார், அந்தத் தாய்மரத்தில் இருந்து 15 நாத்து எடுத்து நட்டு வளர்த்தாரு. அது இப்பவும் நல்ல பலன் கொடுத்துக்கிட்டிருக்கு. 15 வருஷத்துக்கு முன்ன என் வீட்டுக்காரரு 45 நாத்துகளை உற்பத்தி செஞ்சி நட்டாரு. இப்ப அதுவும் சேர்ந்து பலன் கொடுத்துகிட்டிருக்கு. ஆக மொத்தம் இந்த ஒரு ஏக்கர் பூமியில 60 செடிக இருக்கு. எங்க அனுபவத்துல பாடு இல்லாம பணம் சம்பாதிக்க ஏத்த பயிர் எலுமிச்சைதாங்க'' என்ற ஜெயபாரதி, சாகுபடி பாடத்துக்குள் புகுந்தார்.27 அடிக்கு 27 அடி இடைவெளி!''எலுமிச்சை சாகுபடி செய்ய தண்ணீர் தேங்காத, மேட்டுப்பாங்கான நிலம் ஏற்றது. களர் நிலம் தவிர, மற்ற அனைத்து மண்ணிலும் செழிப்பாக வளரும். நடவு செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். பின்பு, வரிசைக்கு வரிசை 27 அடி, செடிக்குச் செடி 27 அடி இடைவெளியில் ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடியில் குழியெடுத்து, மழை மாதங்களில் (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) கன்றை நடவு செய்ய வேண்டும். இந்த இடைவெளியில் நடும்போது ஏக்கருக்கு 60 கன்றுகள் தேவைப்படும். கன்றுகள் சிறியதாக இருந்தால், பச்சைப் புழுக்கள் இலையைச் சாப்பிட்டு விடும். அதனால் எட்டு மாதத்திலிருந்து ஒரு வருட வயதுள்ள கன்றுகளாக நடவு செய்வது நல்லது. சொட்டுநீர்ப் பாசனம் சிறப்பானதாக இருக்கும். இதன் மூலம் மூன்று நாட்களுக்கு ஒரு தடவை பாசனம் செய்யவேண்டும் (நேரடிப் பாசனம் என்றால், குறைந்தபட்சம் ஆறு நாளைக்கு ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும்). நடவிலிருந்து இரண்டரை ஆண்டுகளில் எலுமிச்சை மகசூல் கொடுக்கத் தொடங்கும். நல்ல மகசூல் பெற ஐந்து வருடங்கள் ஆகும்.ஆண்டுக்கு ஒரு உரம்..!முதல் மூன்று வருடங்கள் மட்டும் செடிகளுக்கு இடையில் உள்ள களைகளை எடுத்து விட்டால் போதும். பிறகு, குடை போல விரிந்த செடிகள் நிழல் கொடுப்பதால் 'களை' என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் மரங்களைக் கவாத்து செய்து, புரட்டாசியில் (பருவ மழைக்கு முன்பாக) தொழுவுரம் 25 கிலோ மற்றும் கோழி எரு 10 கிலோவை கலந்து செடிகளைச் சுற்றிலும் உள்ள நான்கடி வட்டப் பாத்தி முழுவதும் கொட்டி விடவேண்டும். பருவமழை பெய்ததும் எரு நன்றாக கரைந்து சூடு ஆறிவிடும். மற்றபடி வேறு எந்த உரமும் செடிகளுக்குத் தேவையில்லை.பறந்து போகும் பழ ஈ!எலுமிச்சையில் பழ அழுகல் நோய் தாக்கும். நன்கு பழுத்த பழங்களில் ஒரு வகை பழ ஈக்கள் அமர்ந்து காய்களைச் சுரண்டுவதால் பழங்களில் கரும்புள்ளிகள் தோன்றி, பழம் அழுகியது போல் ஆகிவிடும். இதைத் தவிர்க்க, 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கை, 20 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, அந்தக் கரைசலை வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து தெளித்தால் போதும்.ஆண்டுக்கு 1,50,000!நாட்டு ரக எலுமிச்சையைப் பொருத்தவரை வருடம் முழுவதும் காய்த்துக் கொண்டே இருக்கும். ஐப்பசி தொடங்கி மார்கழி வரை காய்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால், காய் ஒன்றுக்கு 50 பைசா, ஒரு ரூபாய் என்றுதான் விலை போகும். தை மாதம் முதல் வைகாசி வரையிலான பருவத்தில் காய்ப்பு குறைவாக இருக்கும். அதேசமயம், ஒரு காய் அதிகபட்சமாக 5 ரூபாய்க்குகூட விற்பனையாகும். ஆனி முதல் புரட்டாசி வரையிலானது நடுப்பருவம். இதில் காய்ப்பும் விலையும் சுமாராக இருக்கும். நல்ல பராமரிப்பு இருந்தால் ஒரு செடியில் ஆண்டுக்கு 3 ஆயிரம் காய்களுக்குக் குறையாமல் கிடைக்கும்.''சாகுபடி பாடத்தை முடித்த ஜெயபாரதி, ''சராசரியா ஒரு காய்க்கு ஒரு ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், எங்க தோட்டத்துல இருக்கற 60 மரங்கள் மூலமா ஒரு லட்சத்தி எண்பதாயிரம் காய் கிடைக்கும். வாரம் ஒரு தடவை காய்களைப் பறிச்சு மூலனூர் சந்தையில கொண்டு போய் விக்கிறோம். செலவு போக ஒரு லட்சத்து அம்பதாயிரம் ரூபாய் கையில நிக்கும்'' என்று வருமானக் கணக்கை சொன்னதோடு...''இது, தாத்தா காலத்துல இருந்து, இன்னிக்கு வரைக்கும் கைப்பிடி ரசாயனம்கூட படாத மண்ணு. அதுக்கு முன்ன ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் நிலமா இருந்ததால, அதோட எருக்களும் மண்ணுல ஏற்கெனவே மண்டிக் கிடக்கு. அதனால, வேற எந்த இடுபொருளும் இந்த நிலத்துக்குத் தேவையில்ல. இதுல எதைப் போட்டாலும் விளையும். அதுக்கு நாங்கதான் சாட்சி'' என்று இயற்கைப் பெருமையும் பேசினார் தெம்பாக!
No comments:
Post a Comment