Tuesday, 7 April 2015

சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்..!

சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்..!

விலையில்லா உரம்... எரிபொருளில்லா வாகனம்

!ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம்ஒருங்கிணைந்த பண்ணை'பொதுவா இயற்கை விவசாயத்துல மகசூல் குறையும்னுதான் எல்லாரும் நினைக்கிறாங்க. ஆனா, அது உண்மையில்லை. ரசாயனத்துல இருந்து திடீர்னு இயற்கைக்கு மாறும்போது மகசூல் குறையலாம். ஆனா, போகப்போக இயற்கை விவசாயத்துல செலவே இல்லாம, ரசாயனத்துக்கு ஈடா கண்டிப்பா மகசூல் கிடைக்கும். இதுக்கு நானே உதாரணம்' என்று 'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை பற்றி சிலாகிக்கிறார், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன்.சுற்றுச்சூழல் பாதிப்பைப் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள் எல்லாம், வாகனங்கள் மூலமாக காற்று மண்டலத்தைக் காயப்படுத்திக் கொண்டு இருக்கும்போது, சூழல் நலனைக் கருத்தில் கொண்டு குதிரை வண்டியில்தான் பயணம் செய்து வருகிறார், இந்த சூழலியலாளர் லோகநாதன். சின்னியம்பாளையத்தில் உள்ள அவருடைய பண்ணையில் லோகநாதனைச் சந்தித்தோம்.விட்டு விட்டுப் பெய்யும் தூறல்மழை... வானம் வெளி வாங்கக் காத்திருக்கும் மேய்ச்சல் ஆடுகள்... தொழுவத்தில் தலைசிலிர்க்கும் நாட்டுமாடுகள்... வெதுவெதுப்பைத்தேடி அலையும் கோழிக்குஞ்சுகள்... அசைபோடும் ஆசைக் குதிரைகள்... என ஒருங்கிணைந்து கிடக்கிறது, இவருடைய ஐந்து ஏக்கர் பண்ணை. ஒற்றைக்குதிரை வண்டியில் வலம் வந்த லோகநாதன், அதை உரிய இடம் சேர்த்துவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார்.''30 கிலோ மீட்டர் சுத்தளவுக்கு எந்த ஜோலியா இருந்தாலும், எரிபொருள் போடக்கூடிய வாகனங்களைப் பயன் படுத்துறதில்லீங்க. குதிரை வண்டி சவாரிதான். எங்க வீட்டு குழந்தைங்க இதுல தான் பள்ளிக்கூடம் போறாங்க. டவுன் வீதியில ஓட்டிட்டுப் போறப்போ ஆச்சர்யமா பார்ப்பாங்க. வாகனப் புகையால ஏற்படுகிற சுற்றுசூழல் மாசை இந்த குதிரை வண்டி சவாரி ஒரளவு குறைக்கிறதுங்கிறதுல எனக்கு பரமதிருப்தி' எனும் லோகநாதன், சவாரிக்கு மட்டுமல்லாது, பல்வேறு பயன்பாட்டுக்காக மூன்று குதிரைகளை வளர்த்து வருகிறார்.''காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்துல மொத்தம் அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. நெல் விவசாயம்தான் பிரதானம். முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட் முறையில பாரம்பரிய ரகங்களைப் பயிர் பண்றேன். ஒரு காலத்துல முப்போகம் நெல்லு வெளைஞ்ச பூமி. பல வருஷமா பருவமழை பெய்யாம போச்சு. கிடைச்ச பாசன தண்ணியை வெச்சு ஒருபோக வெள்ளாமைதான் நடந்துச்சு. அதனால அஞ்சு ஏக்கர்ல மொத்தமா நெல் சாகுபடி செய்யாம, மூணு ஏக்கர்ல மரப்பயிர்களை நட்டுட்டேன். 2007ம் வருஷ கடைசியில, ஈரோட்டுல பசுமை விகடன் நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில கலந்துக்கிட்டு, பயிற்சி எடுத்தேன். பயிற்சி முடிஞ்ச கையோட நாலு நாட்டு மாடுகள வாங்கிட்டு வந்து தொழுவத்துல கட்டினேன். அதுல இருந்து பாலேக்கர் சொல்லிக் கொடுத்த மாதிரிதான் பண்ணையம் பண்றேன்.

நாட்டு ரக நெல் வகைகள்!மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா, பூங்கார்னு போன போகங்கள்ல மாத்தி மாத்தி நடவு செஞ்சிருந்தேன். அதை இருப்பு வெச்சு விதைநெல்லாகவும், அரிசியாகவும் கேட்கிறவங்களுக்குக் கொடுத்துட்டு இருக்கேன். இந்த போகத்துல சொர்ணமசூரி ரக நெல்லை நடவு செஞ்சிருக்கேன். இதோட மொத்த வயசு 120 நாட்கள். இப்ப 70 நாள் பருவம். பூட்டை எடுத்திடுச்சு. தை மாசம் அறுவடை செய்யலாம்.

பிழையில்லா விளைச்சலுக்கு பீஜாமிர்தம்!அடுத்த போக வெள்ளாமைக்குத் தேவையான விதைநெல்லை நேர்த்தி செஞ்சு சேமிச்சு வெச்சுக்குவேன். அதுக்கு பீஜாமிர்த கரைசலைத்தான் பயன்படுத்துறேன். வளரும் நாற்றுகள்ல வேர் சம்பந்தமான நோய்களைக் கட்டுபடுத்த இந்த பீஜாமிர்தம் உதவியா இருக்குது. நெல்லை நாற்றங்கால்ல விதைச்ச 15ம் நாள்ல ஒரு கைக்களை எடுத்து, 10 லிட்டர் அமுதக்கரைசலை பாசன தண்ணியில கலந்து விட்டா போதும். முப்பது நாள்ல இருந்து நாப்பது நாளுக்குள்ள நாத்து தயாராகிடும். ஒரு போகம் முடிஞ்சதும், வயல்ல ஆட்டுக்கிடை, மாட்டுப்பட்டி போட்டுடுவோம். அதனால ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம் ரெண்டும் மண்ணுல மண்டிக் கிடக்கும். இது நல்ல அடியுரமா இருக்குது.அறுவடைக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துறது கிடையாது. கருக்கறுவாள் மூலமா அறுவடை செஞ்சு, களத்து மேட்டுல கதிரடிச்சுக்குவோம். எனக்கு ஏக்கருக்கு சராசரியா 1,700 கிலோ நெல் கிடைக்குது. இதை நேர்த்தி செய்து 700 கிலோவை விதை நெல்லா, கிலோ 50 ரூபாய்னு விற்பனை செஞ்சுடுவேன். இதன் மூலமா 35 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆயிரம் கிலோ நெல்லை அரிசியா அரைக்கிறப்போ... 600 கிலோ அரிசியும், 400 கிலோ தவிடும் கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 70 ரூபாய்னு 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். தவிடை மாடுகளுக்குத் தீவனமாக வெச்சுக்குவேன். முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட் முறையில செய்றதால ஏக்கருக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும். இந்தக் கணக்குல ஏக்கருக்கு 65 ஆயிரம் ரூபாய் லாபம். மாட்டுக்கான தவிடும், வைக்கோலும் போனஸ்' என்று புன்னகைத்த லோகநாதன், தனது ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி விவரித்தார்.

ஒன்றின் கழிவு.. மற்றொன்றின் உணவு!'எங்கிட்ட நாட்டுப் பசுக்கள் 5, வெள்ளாடு மற்றும் குட்டிகள் 20, செம்மறி ஆடுகள், கோழி மற்றும் குஞ்சுகள்20, வாத்துகள்12, குதிரைகள் 4 இதெல்லாம் இருக்கு. மாடுகளோட சாணம், கோமியத்தை வெச்சு ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பீஜாமிர்தம் மாதிரியான ஜீரோ பட்ஜெட் இடுபொருட்களை பைசா செலவில்லாம தயாரிச்சுக்கிறேன். இதுபோக வீட்டுக்குத் தேவையான பசும்பால் கிடைச்சுடுது. இந்த நாட்டு மாடுகள் மூலமா வருஷத்துக்கு 3 கன்னுகள் வரைக்கும் எடுத்து விற்பனை செய்றேன். இதன் மூலமா 30 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. வருஷத்துக்கு 15 ஆட்டுக் குட்டிகளை விற்பேன். இதன் மூலமா குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. ஆடுகளோட புழுக்கை, மூத்திரத்தை எடுத்து சர்க்கரைப் பாகு கலந்து ஆட்டூட்டம் தயாரிச்சு... எள், தட்டைப்பயறு மாதிரியான வரப்புப் பயிர்களுக்கு கொடுக்குறேன். செம்மறி ஆடுகள், வயல்ல இருக்கற களைகளைக் கட்டுப்படுத்திடுதுங்க.. அதுகளோட புழுக்கையும் மண்ணுக்கு உரமாகி, உடனடியா பலன் கொடுக்குது. வருஷத்துக்கு அஞ்சு செம்மறியாட்டுக் குட்டிகளை விற்பனை செய்றது மூலமா 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. கோழிகள் மூலமா கிடைக்குற முட்டைகளைப் பொரிக்க வெச்சுடுவேன். இதுல கிடைக்கிற சேவல் குஞ்சுகளை மட்டும் தனியா வளர்த்து, பெரிய சேவலா விற்பனை செய்றேன். இதன் மூலமா வருசத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. வாத்துகள் வயல்ல மேய்ஞ்சு, புழு பூச்சிகளைத் தின்னு காலி செய்யுதுங்க. அதோட எச்சம் பயிருக்கு உரமாகுது. வாத்து முட்டைகள் விற்பனை மூலம் ஒரு சின்ன வருமானமும் கிடைக்குது.5 அடி இடைவெளியில, மூணு ஏக்கர்ல 8 ஆயிரம் சவுக்கு மரங்களை நட்டு மூணு மாசம் ஆகுது. நாலு வயசுல 200 ஈட்டி மரங்களும் நம்ம பண்ணையில இருக்கு. வயல் முழுக்க வரப்புல தட்டைப்பயறை விதைச்சு இருக்கேன். அதனால வரப்புகள்ல களைகள் கட்டுப்படுறதோடு, வயல்ல இருக்கற மற்ற பயிர்களை நோக்கி வர்ற புழு, பூச்சிகளை ஈர்த்து, பயிர்களையும் பாதுகாக்குது இந்த தட்டைப்பயறு. கூடவே, இதன் மூலமாவும் ஒரு வருமானம் கிடைக்குது'' என்ற லோகநாதன், நிறைவாக, ஆத்மதிருப்தி போதும்!'ஜீரோ பட்ஜெட் முறையில பண்ணையம் பண்றதால, வீட்டுக்குத் தேவையான அரிசி, பயறு, பால் எல்லாம் செலவில்லாம கிடைச்சுடுது. ஆடு, மாடுகளுக்குத் தேவையான தீவனமும் கிடைச்சுடுது. இதுபோக ரெண்டு ஏக்கர்ல இருந்து நெல், கால்நடைகள் மூலமா வருஷத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் லாபம் கிடைக்குது. மூணு ஏக்கர்ல இருக்கற மரப்பயிர்கள் மூலமா இன்னும் நாலஞ்சு வருசத்துல ஒரு தொகை கிடைக்கும். இப்படியெல்லாம் லாபக் கணக்குப் போட்டு நான் சொல்றதால, பணம்தான் என்னை திருப்திப்படுத்துதுனு நினைச்சுடாதீங்க. இந்த ஒருங்கிணைந்த பண்ணையில கிடைக்கிற விலைமதிப்பில்லாத ஆத்மதிருப்திக்கு இணையே இல்லீங்க.' என்று சொல்லி விடைகொடுத்தார்.


ஜீரோ பட்ஜெட் நெல் சாகுபடி!லோகநாதன், ஜீரோ பட்ஜெட் முறையில் சொர்ணமசூரி ரக நெல் சாகுபடி செய்யும் முறை இதுதான் நன்கு உழுது தயார் செய்த வயலில், நாற்றுக்கு நாற்று 25 சென்டி மீட்டர் இடைவெளி இருக்கும்படி, ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 40ம் நாட்களில் கைகளால் களை எடுத்து, 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். இது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை பலமடங்கு பெருக்குவதுடன், ஆழத்தில் இருக்கும் மண்புழுக்களை மேலே வரச்செய்து பயிர்களுக்குத் தேவையான நுண்ணூட்டங்களைக் கொடுக்கச் செய்கிறது. அவ்வப்போது பயிரின் வளர்ச்சியைப் பொறுத்து ஜீவாமிர்தத்தை பாசன நீரில் கலந்து வர வேண்டும்.


பீஜாமிர்தம்!தண்ணீர் 10 லிட்டர், மாட்டுச் சாணம் 3 கிலோ, மாட்டு சிறுநீர்3 லிட்டர், சுத்தமான சுண்ணாம்பு30 கிராம் இவற்றை ஒரு வாளியில் இட்டு, ஒரு கைப்பிடி அளவு வரப்பு மண்ணையும் சேர்த்து, நன்றாகக் கலக்கி... 24 மணிநேரம் ஊறவிட வேண்டும். இதுதான் வல்லமையுள்ள பீஜாமிர்தம். விதைக்கும் முன்னர் விதைநெல்லை இந்தக் கரைசலில் போட்டு, இரண்டு மணி நேரம் ஊறவிட்டு, ஈரப்பதம் போக உலரவைத்து, நாற்றங்காலில் விதைக்கலாம்.

அமோக விளைச்சலுக்கு அக்னி அஸ்திரம்!பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் குருத்துப்புழு, இலைச்சுருட்டுப்புழு, கதிர்நாவாய்ப்பூச்சி, வெள்ளை ஈக்கள் வர வாய்ப்புகள் உண்டு. 100 லிட்டர் தண்ணீரில், இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைக் கலந்து, அதிகாலை வேளையில் புகைபோல் தெளித்தால்... பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் அனைத்தும் போய்விடும். மற்ற ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் போல் வாரம் ஒருமுறை தெளிக்கவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைப் பொறுத்தமட்டில் நோய்தாக்குதல் தென் பட்டால் மட்டும், அக்னி அஸ்திரத்தைப் பயன்படுத்தினால் போதுமானது. அசுவிணி, செம்பேன் மற்றும் பூஞ்சணத் தொற்று தென்பட்டால், மாதம் இரண்டு முறை பிரம்மாஸ்திரம் தெளிக்கவேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமான நீர்ப்பாசனம் கொடுத்து வந்தால், 120ம் நாளில் அறுவடை செய்யலாம்.




செலவில்லாமல் குடற்புழு நீக்கம்!கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய, தான் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றிப் பேசிய லோகநாதன், 'ஆடு, மாடுகளுக்கு வருஷத்துக்கு ரெண்டு தடவை குடற்புழு நீக்கம் செய்யணும். இதுக்காக மருந்துக்கு எங்கயும் அலைய வேண்டியதில்லை. தெளிஞ்சு, கண்ணாடி மாதிரி இருக்கற சுண்ணாம்புத் தண்ணியைக் கொடுத்தாலே போதும். தன்னால குடல்ல இருக்கற புழு, பூச்சிக வெளியே வந்திடும். மாட்டுக்கு 500 மில்லி; ஆட்டுக்கு 200 மில்லி; ஆட்டுக்குட்டிக்கு 100 மில்லி; குதிரைக்கு 500 மில்லிங்கிற அளவுல கொடுக்கணும். 50 வருஷமா இதைத்தான் கொடுத்துட்டு இருக்கேன்' என்றார்.


தொடர்புக்கு,லோகநாதன்,செல்போன்: 9865590883.

Monday, 9 March 2015

சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கும் பதிவு: கால அவகாசம் நீட்டிப்பு

பண்ணை நீர் மேலாண்மை திட்டம் மற்றும் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (பட்டியல்) வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் மற்றும் இதர வகுப்பு விவசாயிகளுக்கும் இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்வதற்காக கால அவகாசம் இம்மாதம் 24 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:திருவள்ளுர் மாவட்டத்தில் பண்ணை நீர் மேலாண்மை திட்டம் மற்றும் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (பட்டியல்) வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் மற்றும் இதர வகுப்பு விவசாயிகளுக்கும் இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்வதற்காக கால அவகாசம் இம்மாகம் 24-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் கணிணி சிட்டா, அடங்கல், நில வரைபடம், பாஸ்போட் அளவு புகைப்படம், ரேஷன் கார்டு நகல், சம்மந்தப்பட்ட வட்டாச்சியரிடம் பெறப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயி சான்றிதழ், மின் இணைப்பு அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்களது வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி பயன்பெற வேண்டும். ஒரு ரேஷன் கார்டில் உள்ள நபர்களுக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டர் பரப்பிற்கு சொட்டு நீர்ப் பாசனம்  அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியமாக வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு தனியாக மின் இணைப்பு மற்றும் மோட்டார் வசதி இருக்க வேண்டும். தகுதி உள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மண்ணைப் பொன்னாக்கும் தென்னை நார்க் கழிவு உரம்

அதிக சத்துகளுடன் கூடிய தென்னை நார்க் கழிவு உரம் மண்ணைப் பொன்னாக்கும் வரமாக விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.தென்னை நார்க் கழிவில் எளிதில் சிதைவடையாத லிக்னின், செல்லுலோஸ், கரிமம் ஆகியவை உள்ளன.தென்னை நார்க் கழிவு நிலத்தில் மக்கும்போது தழைச்சத்தின் அளவு குறைகிறது. ஆய்வுகளின் முடிவில் வீணடிக்கப்படும் தென்னைக் நார்க் கழிவை உயிரியல் முறையில் புளுரோட்டஸ் என்னும் காளான் வித்தைப் பயன்படுத்தி மக்க வைத்து ஊட்டமிகு எருவாக்குவதால் அதன் பயிர்ச் சத்து அளவு அதிகரிக்கப்படுகிறது.

தென்னை நார்க் கழிவை மக்க வைக்கும் முறை:தேவையான பொருள்கள்: தென்னை நார்க் கழிவு 1 டன். புளுரோட்டஸ் வித்து 5 பாட்டில்கள், யூரியா 5 கிலோ.செயல்முறைகள்: (முதல் அடுக்கு) நிழலடியில் 5க்கு 3 சதுர மீட்டர் சமதள பரப்பில் 100 கிலோ கழிவுகளை சீராகப் பரப்பி, நன்கு நீர்த் தெளிக்க வேண்டும். பின்னர் அதன் மீது ஒரு பாட்டில் புளுரோட்டஸ் வித்தை சீராக தூவவும்.(இரண்டாவது அடுக்கு) அதன் மீது மீண்டும் 100 கிலோ கழிவை சமமாக பரப்பி நன்றாக நீர்த் தெளித்து ஒரு கிலோ யூரியாவை சீராகத் தூவ வேண்டும்.இவ்வாறு இரண்டு அடுக்குகளை மாற்றி மாற்றி ஒரு மீட்டர் உயரத்துக்கு சீராக அடுக்க வேண்டும்.அதை கணிசமான ஈரத்துடன் சேர்த்து மக்க வைக்க வேண்டும். சுமார் 30 முதல் 45 நாள்கள் வரை மக்க வைத்தால் நல்ல உரமாக மாறிவிடும்.

தென்னை நார்க் கழிவு பயன்கள்: ஒரு ஏக்கருக்கு 5 டன் தென்னை நார்க் கழிவை இடுவதால் கீழ்கண்ட நன்மைகள் கிடைக்கின்றன.களிப்பாங்கான மண்ணின் இறுக்கத் தன்மையைக் குறைத்து நீர் கடத்தும் திறனை அதிகரிக்கிறது.மணற்பாங்கான மண்ணிலும், மானாவரி நிலங்களிலும் நீர்ப்பிடிப்புத் திறனை மேம்படுத்தி மண்ணின் வளத்தை பெருக்குகிறது.களர் நிலங்களிலும் தோல் தொழிற்சாலைக் கழிவினால் பாதித்த நிலங்களிலும் உள்ள தீங்கை நீக்கி விளைச்சலை அதிகரிக்கிறது.ஊட்டச் சத்துக்கள் மிக்க இந்த எரு அனைத்து வகை நிலங்களிலும் மண்ணை வளமாக்கி விளைச்சலைக் கூட்ட வல்லது.கழிவுப் பொருள்களை மக்கச் செய்து எருவாக்குவதால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது.எனவே விவசாயிகள் மேற்கண்ட முறையில் தென்னை நார்க் கழிவு உரத்தை தயாரித்து தங்களது மண்ணைப் பொன்னாக்கலாம் என வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Monday, 2 March 2015

சிவகங்கையில் மணக்கும் "சம்பங்கி பூ'

வானம் பார்த்த பூமி சிவகங்கை. இம் மாவட்ட நிலத்தில் பூக்கள் விளைவது விவசாயிகளுக்கு அரிய விஷயம். ஆனாலும் சிவகங்கை கவுரிபட்டி விவசாயி எஸ்.மோகன், தனது நிலத்தை பண்படுத்தி நவீன சொட்டுநீர் பாசன கருவி மூலம் நீர் பாய்ச்சி, "சம்பங்கி பூ' சாகுபடி செய்து சாதித்து வருகிறார்.விவசாயி மோகன் கூறியதாவது: சேலத்தை சேர்ந்த நாங்கள் குடும்பத்துடன் விவசாயம் செய்ய 23 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தோம். கவுரிபட்டியில் வாங்கிய நிலத்தை பண்படுத்தி, 3 ஏக்கரில் சம்பங்கி பூச்செடி நடவு செய்தோம். சேலம், ஜெயங்கொண்டானில் நாட்டு, ஒட்டு ரக(பிரிஜ்வார்)சம்பங்கி விதைகளை (கிழங்கு வகை) வாங்கி நடவு செய்தேன். 6 மாதங்கள் பராமரித்த பின் பூக்கள் பூக்க துவங்கும். பூச்செடிகளுக்கு தண்ணீர் சிக்கனத்திற்காக "பட்டர்பிளை' சொட்டு நீர் பாசன கருவி பொருத்தியுள்ளேன். பூச்செடி நடவிற்கு உரம், இயற்கை உரம், சொட்டு நீர் கருவி பொருத்துதல் போன்றவற்றிற்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 கிலோ வரை சம்பங்கி பூக்கள் விளையும். இவற்றை மதுரை மார்க்கெட்டில் விற்று வருகிறோம். பூக்களை மொட்டுகளாக மட்டுமே பறிக்க வேண்டும். மதுரை மார்க்கெட்டில் தற்போது சம்பங்கி பூ கிலோவிற்கு ரூ.40 மட்டுமே கிடைக்கிறது. முகூர்த்த காலங்களில் கிலோ ரூ.150 முதல் 200 வரை விற்றால் தான், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சம்பங்கி பூக்கள் குறைந்த விலைக்கு விற்பதால் ஆண்டுக்கு ரூ.1.08 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். செடிகள், ஆட்கள் கூலி, பராமரிப்பு செலவு போக குறைந்த வருவாயே கிடைக்கும். முகூர்த்த காலங்களில் நல்ல விலை போனால் லாபம் கிடைக்கும், என்றார். ஆலோசனைக்கு 99766 50101.-என்.வெங்கடேசன், சிவகங்கை. 

Wednesday, 25 February 2015

வெளுக்கும் மோடி சாயம்!

வெளுக்கும் மோடி சாயம்!

உணவளித்து அனைவரையும் காக்கும் விவசாயிகளின் வாழ்வாதரமான விளை நிலங்களை, வெளிநாட்டு கம்பெனிகள் லாபத்திற்குத்  தாரை வார்க்கும்  மத்திய அரசின்  மா பாதக செயலுக்கு, நாடு முழுவதும் கட்சி பாகுபாடின்றி கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.ஆனால் தாம் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை நிறைவேற்றுவதிலும்நடைமுறைப்படுத்துவதிலும் இருந்து பின்வாங்கும் கருத்துக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி விடாப்பிடியாக இருக்கிறார்.பாஜகவின் முதன்மை அமைச்சர்கள்,ஆர்.எஸ்.எஸ்.மற்றும் சிவசேனா ஆகிய கொள்கை சகோதரர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பிரதமர் மோடி," இந்தச் சட்டம் நிச்சயம் விவசாயிகளுக்கு நன்மை தரும்.விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும்.எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டம் குறித்து கட்டுக்கதைகளைப் பரப்பி வருகிறார்கள்.  காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த மாநிலங்கள் மற்றும் அம்மாநில முதல்வர்கள் கூறிய கருத்துக்கள் அடிப்படையில்தான் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. நாம் அனைவரும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க தான் இங்கே இருக்கிறோம்" என்று முழங்கியிருக்கிறார்.காலம் காலமாக வேளாண்மை செய்து தங்களின் வாழ்க்கையை  நடத்தி வரும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை ஒரு சட்டம் மூலம் நிர்மூலமாக்கவும் உணவு பொருட்களுக்கு அந்நிய நாடுகளை  அண்டி இருக்கவேண்டிய அவலத்திற்கு தள்ளிடவும் மோடி நினைக்கிறார் என்பதை காட்டுகிறது அவரின் பேச்சு.தொண்ணூறுகளின் மத்திய காலத்தில் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் இந்திய முழுமைக்கும் பொருளாதாரத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட அறிவியல் முன்னேற்றம், உலக அரங்கில் இந்தியாவின் அடையாளத்தை பலப் படுத்தியது. ஆனால் வேளாண்மை அதல பாதாளத்தில் விழுந்தது.இதை பற்றி அக்கறை கொள்ளாமல் அந்நிய கம்பெனிகளின் கல்லாவை நிரப்பும் கடமையில் மட்டுமே கண்ணாக  இருந்தது நரசிம்மராவ் அரசும், மன்மோகன் அரசும். மகராஷ்டிராவிலும்,ஒருங்கிணைந்த ஆந்திராவிலும் ஆயிரக் கணக்கான விவசாயிகளை தற்கொலைப் பள்ளத்தாக்கில் தள்ளியது.  `கார்ப்ரேட் ` நிறுவனங்களின் பகட்டிற்காக,  வாழ வழியின்றி கடன்சுமை நெருக்க,விளை பொருட்களுக்கு உரிய விலையின்றி, மனம் நொந்து  சாவைத்  தேடிய அப்பாவி விவசாயிகள் அழிந்த கதை இந்திய வரலாற்றில் உறைந்து கிடப்பதை மறந்திட முடியாது.மீண்டும் இதே போன்ற தற்கொலை வாழ்வை நோக்கி தள்ளும் சட்டமாகத்தான், மோடியின் நிலம் கையகப் படுத்தும் அவசர சட்டம் காட்சியளிக்கிறது. இந்த அவசர சட்டம் என்ன திருத்தங்களைக் கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.ஏற்கெனவே உள்ள சட்டத்தில் நிலம் கையகப் படுத்தும்போது  சில குறிப்பிட்ட விசயங்களுக்காக நிலம் கையகப் படுத்தினால்,அதற்கு நில உரிமையாளர்கள் 80 சதவீதம் பேரிடம் முன் அனுமதி கேட்க தேவையில்லை என்று சட்டத்தின் 10(ஏ) என்ற விதி கூறுகிறது.இதில்தான் இப்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.கீழ்க்கண்ட 5 பிரிவுகளுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, நிலத்தின் உரிமையாளர்களில் 80 சதவீதம் பேர்களின் அனுமதி தேவையில்லை.அவை:1.தேசிய பாதுகாப்பு தொடர்பானவை.2.ராணுவம் தொடர்பானவை.3.மின்சார திட்டத்தை உள்ளடக்கிய அடிப்படை ஆதார வசதிகள்.4.தொழில் பூங்காக்கள்.5.ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டங்கள் மேலும், நிலம் கையகப்படுத்தும்போது அந்த நிலம் விவசாயம் செய்வதற்கு உரிய நிலம் தானா என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும், முன்பு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது மோடி கொண்டுவந்துள்ள சட்டத்தால், விளை நிலமா என்பதை பார்க்கவேண்டியதில்லை. செழிப்பான விவசாய நிலத்தைக் கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றிட முடியும்.இந்தத் திருத்தம் வருவதற்கு முன்பே மேற்கு வங்க மாநிலத்தில்  சிங்கூர் பகுதியில் கொண்டுவரப்பட்ட கார் கம்பெனிக்கு செழித்த விலை நிலங்கள் பலி கொடுக்கப் பட்டது நினைவிருக்கலாம்.அதற்கு எழுந்த எதிர்ப்பும் விவசாயிகளின் போராட்டம் இன்றும் தீர்ந்த பாடில்லை.அரசால் கையகப்படுத்தப்படும் போது அதற்கு நிவாரணம் மற்றும் இழப்பீடுகள் என்பது புதியதாக ஒன்றும் கூட்டப் படவில்லை.அதே போல எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ அது 5 ஆண்டுகளில் நிறைவேற்றப் படவில்லை என்றால் அந்த நிலம் திரும்ப விவசாயிகளுக்கே அளிக்கப் படவேண்டும் என்று முன்பு இருந்த சட்டத்தில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது மோடி கொண்டுவந்துள்ள சட்டத்தில் இது போன்று எதுவும் கூறப்படவில்லை.இப்படி தான் நினைப்பதுதான் சிறந்த திட்டம் என்று பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள சட்டம், நிலத்தை மட்டுமல்ல கோடிக்கணக்கான  ஏழை, எளிய நடுத்தர விவசாயிகளின் உயிருக்கும் உடைமைக்கும் உலை வைக்கும் திட்டம் என்பதன்றி வேறு இல்லை.வெளிநாட்டு கம்பெனிகள் மோடியின் கனவுத் திட்டமான `இந்தியாவில் தயாரிப்போம்` என்பதை  நனவாக்க இந்தியாவின் குக்கிராமங்களை நோக்கி படையெடுக்க களம் அமைத்து தரும் பணியை மத்திய அரசு தீவிரமாக்கிதான் உள்ளது. ஆனால் ஏற்கெனவே நாடு முழுவதும் சிப்காட் பேட்டைகள் அமைக்கப்பட்டு தோல்வியில் முடிந்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தற்போது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை இனம் கண்டிட மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். ஏற்கெனவே ஆண்டுக்கு ஆண்டு விளை நிலங்களின் பரப்பளவு இந்தியாவை பொறுத்தவரை சுருங்கி கொண்டே வருகிறது என்று செய்திகள் அச்சப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இதுபோன்று சட்டப் பூர்வமான நில அபகரிப்பில் அரசு ஈடுபடுவது இந்தியாவின் வேளாண்மையை சவக் குழிக்குள் தள்ளிடும் செயலாக அமைந்துவிடும்.'எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள்தான் எதிர்க்கட்சிகள்' என்று  ஆளும் கட்சி என்ற மிதப்பில் பாஜக கூறினாலும், இந்த விசயத்தில் எதிர்க்கட்சிகள் சொல்லும் உண்மையை பிரதமர் மோடி உணரவேண்டும். பாஜகவுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சகோதர உறவு பாராட்டும் சிவசேனா, " விவசாயிகள் நம்பிக்கை வைத்து ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். விவசாயிகளின் கழுத்தை நெரித்து பாவம் செய்யக் கூடாது. நிலத்தைக் கையகப்படுத்தும் செயல் குறித்து மறு ஆய்வு செய்யவேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளது. திருவள்ளுவர் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு, அவரின் குறள் காட்டும் பாதையில் தானும் செல்ல முன்வரவேண்டும்." இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்  கெடுப்பா ரிலானுங் கெடும் " இதன் பொருள், கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான் என்பதாகும்.மக்களவையில் மக்கள் வழங்கிய `பெரும்பான்மை பலம்` கொண்டு தனக்கு  மதம்பிடிக்காமல் பார்த்துக்கொள்வது பாஜகவின் கையில்தான் இருக்கிறது.

இது ஜீரோ பட்ஜெட் அசத்தல்....

இது ஜீரோ பட்ஜெட் அசத்தல்....

7 ஏக்கர்...மாதம் ரூ.98 ஆயிரம்...இனிப்பான வருமானம் கொடுக்கும் இளநீர்!''பசுமை விகடன்ல படிச்சுட்டு, கர்நாடக மாநிலம் மாண்டியா போய் கன்னு வாங்கிட்டு வந்து நட்டோமுங்க... இப்போ மாசா மாசம் வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்குதுங்க' என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார்கள், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள எரசனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.சுப்பிரமணியம்-வஞ்சிக்கொடி தம்பதி.நுரை ததும்பும் தண்ணீர்... சலசலத்து ஓடும் அமராவதி ஆறு... அதன் கரையில் வளைந்து பிரிந்து போகும் வண்டிப்பாதை. அதில் சில நிமிடங்கள் பயணித்தால் வந்து சேர்கிறது, சுப்பிரமணியத்தின் பண்ணை. எட்டிப் பறிக்கும் உயரத்தில் வளர்ந்து நிற்கும் ஏழு ஏக்கர் தென்னை. அதில் ஆரஞ்சு வண்ணத்தில் அழகு காட்டித் தொங்கும் இளநீர்க்குலைகள் என்று குளுமை சாமரம் வீசும் தோப்புக்குள் இளநீர் பறிப்பில் இருந்த சுப்பிரமணியனைச் சந்தித்தோம்.''ஜீரோ பட்ஜெட் இளநீருங்க... குடிச்சுப் பாருங்க சும்மா ஜில்லுனு தித்திப்பா இருக்கும்'' என்று சொல்லியபடி இளநீரைச் சீவி நம் கையில் கொடுத்தபடியே பேசத்தொடங்கினார்.

நிரந்தர சாகுபடிக்கு மாற்றிய சூழல்!

''இந்த இடத்துல எனக்கு கிணத்துப் பாசனத்துல 15 ஏக்கர் நிலம் இருக்கு. வெங்காயம், மஞ்சள், குச்சிக்கிழங்கு (மரவள்ளி), கடலைனு எதைப் போட்டாலும் அமோக விளைச்சல் கொடுக்கிற செம்மண் பூமி. பக்கத்துல ஆறு ஓடுது. பருவமழை சரியா பெய்ஞ்சு ஆத்துல தண்ணி வர்றப்போ ஊத்துக்கசிவில பாசனக் கிணறு நொம்பிடும். அந்த சமயத்துல 15 ஏக்கருக்கும் பஞ்சமில்லாம, பாசனம் கிடைக்கும். ஆறு வறண்டுச்சுனா... போர்வெல் காப்பாத்திடும்.ஆள் பத்தாக்குறை, கட்டுபடியாகாத விலைனு மாத்தி மாத்தி பிரச்னை வந்ததால, நிரந்தர பயிர் சாகுபடிக்கு மாற முடிவெடுத்து... ஏழு ஏக்கர்ல அல்போன்ஸா, செந்தூரா, நீலம், பெங்களூரானு மா ரகங்களை நடவு செஞ்சு, சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சோம். ஒரு ஏக்கர்ல களத்துமேடு, தொழுவம் இருக்கு. மீதி ஏழு ஏக்கர்ல மட்டும் வருஷ வெள்ளாமை வெச்சோம். ஆனா, வருஷ வெள்ளாமை தோதா அமையல. அதனால, இந்த ஏழு ஏக்கர்லயும் வேற ஏதாவது நிரந்தர பயிரைப் போடலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்பதான்... 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியிட்ட பசுமை விகடன்ல, மாண்டியா இளநீர் பத்தி 'கலர் கலரா இளநீ... கட்டுக்கட்டா பணம்’ங்கிற தலைப்புல செய்தி வந்துச்சு. அதுல, தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவப்பிரகாசம்கிறவரைப் பத்தி எழுதியிருந்தாங்க. சிவப்பிரகாசத்துக்கிட்ட பேசின பிறகு, நாளுக்கு நாள் இளநீருக்கான தேவை அதிகரிச்சுக்கிட்டே வர்ற சூழல்ல, நாமளும் அதை சாகுபடி செய்யுறதுதான் நல்லதுனு முடிவு செஞ்சேன். அடுத்தடுத்து கொஞ்சம் வேலைகள் இருந்ததால உடனடியா செய்ய முடியலை. நடவுக்கு கொஞ்ச வருஷம் தள்ளிப் போயிடுச்சு' என்ற சுப்பிரமணியம் தொடர்ந்தார்.

ஒரு கன்னு 50 ரூபாய்!

'சௌகாட் ஆரஞ்ச் ட்வார்ஃப் (Chowghat Orange Dwar) என்ற ரகத்தைத்தான் சிவப்பிரகாசம் நட்டிருந்தார். சி.ஓ.டினு சொல்லப்படுற அந்த ரக கன்னு, மாண்டியாவில் இருக்குற தென்னை வளர்ச்சி வாரியத்துல கிடைக்கும்கிற தகவலையும் அவரே சொன்னார். நானும் அங்க முறைப்படி பதிவு செஞ்சு 600 கன்னுகள வாங்கிட்டு வந்து நிழலான பகுதியில பதியம் போட்டு நடவு செஞ்சேன். லாரி வாடகை எல்லாம் சேர்த்து ஒரு கன்னுக்கு 50 ரூபாய் அடக்கமாச்சு. வழக்கமா தென்னங்கன்னுகளை 25 அடி இடைவெளியிலதான் நடவு செய்வாங்க. இது குட்டை ரக தென்னைங்கிறதால, மட்டையோட நீளம் குறைவாகத்தான் இருக்கும். அதனால 22 அடி இடைவெளியில நடவு செஞ்சேன்.

ஒரு இளநீர் 14 ரூபாய்


!நடவு செஞ்சு நாலு வருஷம் ஆச்சு. போன வருஷத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா இளநீர் வெட்ட ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் ஒரு வருஷம் போனாத்தான் முழுமகசூல் கிடைக்கும். இப்போதைக்கு மாசாமாசம் கிடைக்கிறதை மொத்த வியாபாரிக்கே விலை பேசிக் கொடுத்துடறேன். வெட்டுக்கூலி, வேன் வாடகை எல்லாம் அவங்க செலவு. நமக்கு ஒரு இளநீருக்கு 14 ரூபாய் கிடைக்குது. ஏழு ஏக்கர்லயும் சேர்த்து மாசம் 98 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இந்த நாலு வருஷத்துல மொத்தம் எனக்கு 90 ஆயிரம் ரூபாய்தான் செலவாகியிருக்கு. காய் வெட்ட ஆரம்பிச்ச ஒரு மாசத்துலயே செலவு செஞ்ச பணம் கிடைச்சுடுச்சு'' என்று பெருமிதப்பட்ட சுப்பிரமணியம்,''முதல் இதழ்ல இருந்து பசுமை விகடனைக் குடும்பத்தோடு ஆர்வமா படிச்சுக்கிட்டு வர்றோம். அது மூலம் நாங்க கத்துகிட்ட விவசாய வழிமுறைகள் ஏராளம். ரசாயன விவசாயம் செஞ்சுக்கிட்டு வந்த எங்களை ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாத்தி, நாட்டு மாடு வாங்க வெச்சதோட, 7 வருஷமா தொடர்ந்து ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யுறதுக்கு தூண்டுகோலா இருக்கிற பசுமை விகடன், இப்ப மாசா மாசம் வருமானம் பாக்கறதுக்கும் காரணமா இருக்கு'' என்று நெகிழ்ந்து விடைகொடுத்தார்.

ஏக்கருக்கு 83 கன்றுகள்


!தென்னை சாகுபடி செய்யும் விதம் பற்றி சுப்பிரமணியம் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...'தேர்வு செய்த நிலத்தில் 22 அடி இடைவெளியில் 3 அடி நீள, அகல, ஆழத்தில் 'ஜிக் ஜாக்’ முறையில் குழியெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 83 குழிகள் வரை எடுக்கலாம். குழிகள் எடுத்து, மூன்று மாதங்கள் வரை நன்றாக ஆறப்போட வேண்டும். பிறகு, குழிகளில் பாதி அளவு மண் நிரப்பி, கால் பங்குக்கு சலித்த மணல் அல்லது கிணற்று மண் இதில் ஏதாவது ஒன்றைக் கொட்டி சமன் செய்து... ஒவ்வொரு குழிக்கும் தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை இட்டு கன்றுகளை நடவு செய்து, மீதமுள்ள மேல் மண்ணைக் கொண்டு மூட வேண்டும். கன்றுகளை பீஜாமிர்தக் கரைசலில் முக்கி எடுத்து விதைநேர்த்தி செய்த பிறகே நடவு செய்ய வேண்டும்.நடவு செய்தவுடன் பாசனம் செய்து... அதன் பிறகு ஈரப்பதத்தைப் பொறுத்து தொடர்ந்து பாசனம் செய்ய வேண்டும். நடவு செய்த 3ம் ஆண்டில் கொஞ்சமாக இளநீர் காய்ப்பு இருக்கும். தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து 5ம் ஆண்டு முதல் முழு மகசூல் கிடைக்கும். மழை இல்லாத நாட்களில், மரம் ஒன்றுக்கு சராசரியாக 100 லிட்டர் பாசன நீர் தினந்தோறும் கொடுக்கக்கூடிய தண்ணீர் வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே தென்னை விவசாயம் 100 சதவிகிதம் பொருந்தும். இல்லையேல் பெயர் அளவுக்கே மகசூல் கிடைக்கும்.


ஊட்டத்துக்கு அமிர்தம்...


வண்டுகளுக்கு அஸ்திரம்!தென்னையைப் பொறுத்தவரை தண்ணீர் உட்பட இடுபொருட்களையும் சரியான நேரங்களில் கொடுத்தால் மட்டும்தான் மரம் நமக்கு விளைச்சல் கொடுக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை சொட்டு நீர் வழியே கொடுத்து வர வேண்டும். பருவமழைக் காலங்களில் (ஆண்டுக்கு இரு முறை) ஒவ்வொரு மரத்துக்கும் 15 கிலோ கோழி எரு இட வேண்டும். வளரும் பருவத்தில் உள்ள தென்னங்குருத்துகளை காண்டாமிருக வண்டு, கூன்வண்டு போன்றவை தாக்கும். சில நேரங்களில் மரங்களின் தண்டுப்பகுதியில் ஓட்டை போட்டு சேதப்படுத்தி அடியோடு சாய்த்து விடும். தென்னை விவசாயத்தின் பெரிய சவாலே இதுதான்.இந்தச் சிக்கலை அக்னி அஸ்திரம் மூலமாக சமாளிக்கலாம். 100 லிட்டர் தண்ணீரில், இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் நாட்டு மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றைக் கலந்து அதில் 50 மில்லி எடுத்து வண்டு இருப்பதாக உணரும் குருத்துக்குள் ஊற்றினால் உள்ளே இருக்கும் வண்டு வெளியேறி விடும். அல்லது சலித்த மணலில் சிறிது வேப்ப எண்ணெய் சேர்த்துப் பிசைந்து குருத்துக்குள் தூவினால் வண்டுகள் மாண்டு விடும்.

மாதம் ஆயிரம் இளநீர்!குட்டை ரகங்களின் மட்டைகளுக்கு குலைகளைத் தாங்க வலு இருக்காது. அதனால், குலைகள் ஒடிந்து விழுந்து விடும். இதைத்தடுக்க... பாரம் தாங்காமல் கீழ் நோக்கி தொங்கும் குலைகளில் கயிறால் இழுத்து வலுவான மேல்மட்டையில் கட்ட வேண்டும். குறிப்பிட்ட உயரம் மரம் வளர்ந்த பிறகு குலைகளைக் கட்டத் தேவை இருக்காது. இந்த சி.ஓ.டி.ரக தென்னையிலிருந்து 30 நாட்களுக்கு ஒரு முறை இளநீர் வெட்டலாம். மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் ஒரு மரத்தில் இருந்து 15 இளநீர்கள் வரை வெட்டலாம். சராசரியாக ஒரு ஏக்கரிலிருந்து மாதம் ஒன்றுக்கு ஆயிரம் இளநீர் பறிக்கலாம். 5 ஆண்டுகளில் முழு மகசூலுக்கு வரும்போது இளநீர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.''தொடர்புக்கு,ஆர்.சுப்பிரமணியம்,  செல்போன்: 9942596971 இயற்கை இளநீர் சுவை அதிகம்

Monday, 16 February 2015

ஆசிரியருக்குக் கைகொடுத்த கீரை: ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலையில் உள்ள கிளுவன்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் பிரபாகரனும், அவரது மனைவியும் இன்றைக்கு முழு நேர விவசாயிகள். தங்களுக்கு இருக்கும் சிறிய நிலத்துடன், கூடுதல் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கீரை விளைவித்து வருகின்றனர்.விவசாயம் நம்பகமானதுவிவசாயி த.பிரபாகரன் கூறுகையில், "நான் எம்.எஸ்.சி., பி.எட். முடித்துவிட்டு மாதம் ரூ. 4 ஆயிரம் சம்பளத்தில் தனியார் பள்ளியில் வேலை பார்த்தேன். சம்பளம் முழுவதும் போக்குவரத்து செலவுக்கே போய்விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை.எங்களுக்குச் சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. விவரம் தெரிந்த நாள் முதல் பெற்றோருடன் விவசாயத்துக்குப் பாடுபட்ட நிலம் என்பதால், அந்த மண்ணை நன்கு அறிந்திருந்தேன்.எங்களது நிலத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, கீரை நல்ல பலன் கொடுக்கும் என்று தெரியவந்தது. எனது மனைவி சிவகாமி (27) எம்.ஏ., பி.எட்., படித்திருக்கிறார். அவரும் ஆசிரியப் பணியை விட்டுவிட்டு விவசாயத்தில் அக்கறை காட்டினார். இருவரும் முழு நேரமாகக் கீரை சாகுபடியில் ஈடுபட்டுவருகிறோம்" என்கிறார்.நேரடி விற்பனைஆழ்குழாய் பாசனத்தை அதிகமும் நம்பியுள்ள இவர்கள் சிறு கீரை, மணத் தக்காளி, வெந்தயக் கீரை, பாலக் கீரை, அரைக் கீரை எனப் பல வகை கீரைகளைச் சாகுபடி செய்துவருகின்றனர். உடுமலையில் உள்ள உழவர் சந்தைக்குத் தினமும் நேரடியாகக் கொண்டு சென்று விற்பதால், நல்ல விலை கிடைக்கிறது.இவர்களிடம் மொத்த விலைக்கு வாங்கும் வியாபாரிகள் மூலம் திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டங்கள் உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்குக் கீரை விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகிறது.ரூ. 2 லட்சம்வருடத்தில் 6 மாதங்களுக்குப் பலன் தருகிற கீரை ரகங்களில் 6 முறை அறுவடை நடக்கும். ஒரு முறைக்கு 12,000 கட்டு கீரை கிடைக்கும். 6 முறைக்கு 72,000 கட்டுகளுக்குத் தலா ரூ.5 கிடைக்கும்.அதனால் ஆண்டு வருவாய் சுமார் ரூ. 3 லட்சம் கிடைக்கும். இதில் ஆள்கூலி, அடியுரம், பராமரிப்புச் செலவுகளுக்காகச் சுமார் ரூ. 1 லட்சம்வரை செலவு பிடிக்கும். எஞ்சியது லாபம்தான் என்கிறார் பிரபாகரன்.அடுத்ததாகக் கீரையுடன் பசுங்குடில் விவசாயம் மூலம் மலைக் காய்கறிகளைச் சாகுபடி செய்யத் திட்டமிட்டிருக்கிறார் பிரபாகரன்.இவரைப் போலவே பலரும் இப்பகுதியில் கீரை சாகுபடி செய்துவருவதால், ‘கிளுவன்காட்டூர் கீரை' சுற்றுவட்டாரத்தில் பிரபலமாகிவருகிறது.விவசாயி பிரபாகரனைத் தொடர்புகொள்ள: 9965351536

மகசூல் கொழிக்கும் ‘கோலியாஸ்’ ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வருமானம்

தமிழக நெற்களஞ்சியத்துக்குச் சொந்தக் காரர்களான தஞ்சைப் பகுதி விவசாயிகள் ’கோலியாஸ்’ கிழங்கு விவசாயத்தில் இப்போது கொடிகட்டிப் பறக்கிறார்கள்.கேரட் வடிவில் பழுப்பு நிறத்தில் இருக்கும் ’கோலியாஸ்’ மருத்துவக் குணம் கொண்டது. கோலியாஸ் செடியின் இலை, தண்டு, கிழங்கு மூன்றிலிருந்தும் ஃபோர்ஸ்கோலி (Forskohlii) என்ற மருத்துவ மூலப்பொருள் எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட சில மாத்திரை, மருந்துகள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தைச் சுத்திகரித்தல், ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்காகத் தரப்படும் மாத்திரைகளில் கோலியாஸ் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.தமிழகம் முழுவதும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு சேலம் ஆத்தூர் பகுதியில் முதன்முதலாகப் பயிரிடப்பட்ட கோலியாஸ், இப்போது ஈரோடு, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. ஓரளவு தண்ணீர் வசதியும் எளிமையான பராமரிப்பும் இருந்தால்போதும் என்பதால் இப்போது தஞ்சை பகுதி விவசாயிகளும் கோலியாஸை பயிரிட ஆரம்பித்திருக்கிறார்கள்.’’நெல், கரும்புக்குப் போடுற மாதிரி அதிகமா உரம் போடத் தேவையில்லை. ஆடு, மாடு எதுவும் இந்த இலையைக் கடிக்காது. இருபது நாளைக்கு ஒரு தடவ லேசா தண்ணீர் விட்டா போதும். ஆறு மாசத்துல மகசூல் எடுத்துடலாம். ஏக்கருக்குச் சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். பத்து டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். டன்னுக்குப் பதினஞ்சாயிரம் கிடைக்கிறதால, எல்லாச் செலவும் போக ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் நமக்கு நிக்கும்’’ என்கிறார் வல்லம் அருகே அய்யாசாமிபட்டியில் கோலியாஸ் பயிரிட்டிருக்கும் விவசாயி அசோக்.செலவும் மானியமும்“நாத்துகள் மூலமே கோலியாஸ் மறு உற்பத்தி செய்யப்படுகிறது. அறுவடைக்கு முன்னதாகப் பதியன் முறையில் இந்த நாத்துகளை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும். தேவைப்பட்டால் சேலத்திலிருந்து நாங்களே நேரடியாக நாத்துகளை சப்ளை செய்வோம்’’ என்கிறார் அருள் ஹெர்பல் நிறுவனத்தின் சேலம் மண்டல மேலாளர் செல்வம்.ஒரு ஏக்கரில் 16 ஆயிரம் நாத்துகளை நட முடியும். இதன் மொத்த விலை 3,500 ரூபாய்தான். நாற்று விற்பனை செய்யும் நர்சரி நிறுவனங்களே விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கிழங்கு, தண்டு, இலைகளை நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்கின்றன. இதனால், விளைச்சலை வண்டி ஏற்றி விற்க வேண்டிய அவசியமும் விவசாயிகளுக்கு இல்லை. கோலியாஸ் பயிரிட ஏக்கருக்கு ரூ. 3,450 அரசு மானியம் தருகிறது என்பது கூடுதல் தகவல்.விவசாயி அசோக்,தொடர்புக்கு: 9047542854
உளுந்து (விக்னா முங்கோ)
பயிர் மேலாண்மைநிலம் தயாரித்தல்நில மேம்பாடுநில மேம்பாட்டிற்கு ஒரு எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழு உரம் 12.5 அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடவேண்டு

ம்விதை அளவுஇரகம்தனிப்பயிர்கலப்புப் பயிர்T 9, கோ 5, TMV 1, VBN 1, VBN 2, VBN 3, VBN (Bg) 4 ADT 5, TMV 12010(தரிசு நெல்) ADT 325..பயிர் எண்ணிக்கை 3,25,000/எக்டர்

பாக்டீரியா ராசியுடன் விதைநேர்த்தி

தமிழ் நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் சி ஆர்.யு -7, 3 பாக்கேட் (600 கிராம் / எக்) மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கிவிக்கும் பாக்டீரியாக்கள் 3 பாக்கெட் (600 கிராம் / எக்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம / எக்) உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும் விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசசோபியம் (2000 கிராம் / எக்) ரூ.10 பாக்கெட் தாவர வளர்ச்சி ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள் (2000 கிராம் / எக்) மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம் / எக்) உடன் 25 கி.கி தொழு உரம் மற்றும் 25 கி.கி.மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும்.

விதைப்புவிதைகளை 30 × 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால், அறுவடைக்கு 5 முதல் 10 நாட்கள் இருக்கும் போது விதைகளை மண்ணில் தூவவேண்டும். தூவும் போது மண்ணில் ஈரப்பதம் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம் வரப்பு ஒரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைஉரமிடுதல்விதைப்பதற்கு முன் அடியுரமாக மானாவாரிப் பயிராக இருந்தால் எக்டருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து 50 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால் எக்டருக்கு 2 சதவீதம் டை அம்மோனியம் பாஸ்பேட்டை பூக்கும் தருணத்தில் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். மானாவாரி மற்றும் இறவை பயிர்களுக்கு டை அம்மோனியம் பாஸ்பேட் 2  சதவீதம் அல்லது யூரியா 2 சதவீதம் பூக்கும் தருணத்திலும் பின்பு 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

பயிர்   ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)தழைமணிசாம்பல்கந்தகம்உளுந்துமானாவாரி12.52512.510இறவை50502520

குறிப்பு:மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும்.நடவு வயலில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நுண்உரக் கலவையை எக்டருக்கு 5 கிலோவை ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும்.(ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக் கலவை மற்றும் தொழுவுரத்தை கலந்து ஒரு மாதம் நிழலில் உலர்த்த வேண்டும்.

உளுந்தின் மகசூலை அதிகரிக்க 1% யூரியாவை இலைவழியாக தெளித்தல்மகசூலை அதிகரிக்க வினையியல், உயிர் இயைபு வழி பண்புகள், இலைத் தெளிப்பாக யூரியா 1% விதைத்த 30 மற்றும் 45ம் நாளில் தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. டெல்டா பகுதிகளில் நெல் தரிசு பயறுகளுக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்ட 2% டி.ஏ.பி கரைசலை இலைவழித் தெளிக்கும் முறையைப் பயன்படுத்தலாம்.
வறட்சியைத் தாங்குவதற்கு இலைவழித் தெளித்தல்உளுந்தில் வறட்சி காலத்தில் இடைப்பருவ மேலாண்மை முறையாக 2% பொட்டாசியம் குளோரைடு + 100 பிபிஎம் போரான் பரிந்துரைக்கப்படுகிறது. ராபி பருவத்தில் பொட்டாசியம் குளோரைடு தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும்.


உளுந்தில் நுண்ணூட்டப் பொருள் கொண்டு சிக்கனமாக விதைநேர்த்தி செய்தல்உயிர் உரங்கள் மற்றும் துத்தநாகம், மாலிப்டினம் மற்றும் கோபால்ட் போன்ற நுண்ணூட்டச்சத்துகள் கொண்டு விதைக்கு மேல் பூச்சு செய்யலாம். ஒரு கிலோ விதைக்கு 0.5 கிராம் பயன்படுத்த வேண்டும்.


பயறு வகை பயிர்களுக்கு தழைச்சத்துக்கு மாற்றாக உயிர்ம ஆதாரங்கள்50 சதவிகித நைட்ரஜனுக்கு மாற்றாக உயிர்ம ஆதாரம் (ஏக்கருக்கு 850 கிலோ மண்புழு உரம்). பயறு வகை பயர்களில் கார அமிலத் தன்மை 6.0க்கும் குறைவான மண்ணில் சுண்ணாம்பு அளிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

நீர் நிர்வாகம்விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த்தண்ணீர், மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும். பயிரின் எல்லா நிலைளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.

இலைவழி நுண்ணூட்டம்டிஏபி அல்லது யூரியா, என்ஏஏ மற்றும் சலிசலிக் அமிலக் கரைசல் தெளித்தல்இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் சலிசலிக் அமிலம் 100 மில்லி  கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்நெல் தரிசு பயறு வகைப்பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம்  பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்.மானாவாரி மற்றும் இறவை பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் அல்லது யூரியா 20 கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்


களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்திகளை முளைப்பதற்கு முன் களைக்கொல்லியான பென்டிமெத்தலின் பாசன நிலையில் ஏக்கருக்கு 3.3 லிட்டர், மழை நேரமாக இருந்தால் @ 2.5 லிட்டரை விதைத்த மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுன்குழல் கொண்ட பேக்பேக் அல்லது நேப்சாக் அல்லது ராக்கர் தெளிப்பானில் ஒரு எக்டருக்கு 500 லி 20ம் நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும் அல்லது களை முளைத்த பின் தெளக்கும் களைக் கொல்லியான குயிசல்பாப் இதைல் எக்டருக்கு 50 கிராம் ai மற்றும் aiயை விதைத்த 15-20 நாளில் தெளிக்க வேண்டும்.  களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால், விதைத்த 15வது நாளிலும் மற்றும் 30வத நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.பாசன உளுந்திற்கு களை முளைக்கு முன் ஐசோப்ரோட்ரான் எக்டருக்கு 0.5 கிலோ அளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து விதைத்த 30ம்நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.


பன்முக பூக்கும் தொழில்நுட்பம்பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சைப் பயிரின் சிறப்பு தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வண்டல் மண், கரிம பொருள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முன் கோடையில் பயிரிட்டால் மற்ற பயிர்களைப் போன்று உரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதனுடன் கூடுதலாக நைட்ரஜன் 25 முதல் 30 கிலோ யூரியாவுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது. பயறு வகை பயிர்கள் உறுதியற்ற வளர்ச்சி பண்புகளைக் கொண்டவை. விதைத்த 40-45ம் நாள் மேலுரமிடல் வேண்டும். பயிரின் 60-65ம் நாள் முதிர்ந்த காய்களுடன் காணப்படும். அடுத்த 20-25ம் நாள் இரண்டாம் முறை முதிர்ந்த காய்கள் காணப்படும். எனவே 100 நாட்களில் இரண்டு முறை அறுவடை செய்ய முடியும்.நெல்- தரிசு:


1.விதைக்கும் காலம்ஜனவரி மூன்றாம் வாரம் முதல் பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை2.விதைகள் விதைத்தல்               தொடர் பயிரிடும் முறையில், உகந்த மண் ஈரப்பதத்தில் நெற்பயிரின் அறுவடைக்கு 5-10 நாட்கள் முன்னரே விதைகளை விதைக்க வேண்டும்.கூட்டு அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பகுதிகளில் நெற்பயிரை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் முன்னரே விதைகளை விதைக்க வேண்டும்.3. டைஅமோனியம் பாஸ்பேட், என்.ஏ.ஏ

3. டைஅமோனியம் பாஸ்பேட், என்.ஏ.ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் தெளித்தல்என்.ஏ.ஏ 40 மிகி/லி மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மிகி/லி பூக்கும் முன் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.டி.ஏ.பி 20 கி/லி பூக்கும் தருணத்தில் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.சாலிசிலக் அமிலம் 100 மிகி/லி பூக்கும் முன் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.

அறுவடை செய்தல்முதிர்ந்த காய்களை பறித்து உலர்த்த வேண்டும்.வேரோடு பிடுங்கவும் அல்லது முழு தாவரத்தையும் வெட்டி எடுக்கவும்., குவித்து வைத்து உலர்த்தவும்.பயிர் பாதுகாப்புஉளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்உளுந்து பயிரைத் தாக்கும் பூச்சிகள்அறுவடை பின்சார் தொழில்நுட்பம்

Wednesday, 11 February 2015

முப்போகம் பலன் தரும் திசு வாழை

விவசாயத்தை பெரிதாக நினைத்து வாழ்ந்த விவசாயிகள் எல்லாம் அவற்றை பிளாட் போட்டு விற்று வருகின்றனர். விளை நிலத்தை சீரமைத்து வாழை விவசாயம் மூலம் வருமானத்தை பெருக்கி வருகிறார் காரைக்குடி, அரியக்குடி வளன் நகர் விவசாயியும் முன்னாள் ராணுவ வீரருமான ஆரோக்கியசாமி.மொத்தமுள்ள 4 ஏக்கரில் ஒரு ஏக்கரில் வாழை, 1.5 ஏக்கரில் நெல், ஒரு ஏக்கரில் தென்னை விவசாயம் மேற்கொண்டுள்ளார். தினந்தோறும் வாழ்வாதாரத்தை வாரி வழங்கும் வெண்டை, கத்தரி விவசாயத்தை அரை ஏக்கரில் செய்து வருகிறார். திசுவாழை பயிரிட்டுள்ள இவர் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் லாபம் பார்த்து வருகிறார்.அவர் கூறியது: ஜி-9 வகை திசு வாழை தோட்டக்கலை துறை உதவி வேளாண் அலுவலர் மங்களசாமி மூலம் எனக்கு கிடைத்தது. கன்றுகள் நம்முடைய வாழை போன்று அல்லாமல் சிறிய செடி போல இருக்கும். 11 மாதத்தில் காய்ப்பு எடுக்க ஆரம்பித்து விடலாம். பச்சை பழ வாழை பயிரிட்டுள்ளேன். ஒரு தாரில் 135 முதல் 140 காய்கள் இருக்கும். தற்போதைய நிலையில் தார் ஒன்று ரூ.500 முதல் 600 வரை விற்பனையாகிறது.ஒரு வாழை காய்த்து முடிந்தவுடன் அதை வெட்டிவிட்டு, அதன் பக்க கன்று மூலம் அடுத்த வாழை உருவாகிறது. ஒரு வாழை வைத்தால், மூன்று முறை மகசூல் பெற முடியும். ஆறு அடிக்கு ஒரு கன்று நட வேண்டும். 15-வது நாளில் ஒரு வாழைக்கு 5 கிலோ மாட்டு சாண உரம், 200 கிராம் டி.ஏ.பி., 200 கிராம் பொட்டாஷ் இட வேண்டும். 40-வது நாள் இதே அளவு உரம் இட வேண்டும்.150-வது நாள் 10 கிலோ மாட்டு சாணம் மட்கியது வைக்க வேண்டும். திசு வாழையை பொறுத்தவரை நீர் சத்து அதிகம் தேவை. இதனால் சொட்டு நீர் பாசனம் சிறந்தது. இந்த வாழை 6-வது மாதம் பூக்கும். 8-வது மாதம் காய்க்க துவங்கும். ஒரு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் செலவாகும். ஆனால், வருமானமோ ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் லாபமாக கிடைக்கும். வாழையின் ஊடே காய்கறி விவசாயமும் மேற்கொள்ளலாம்.அதே போல், நெல் விவசாயம் உரம் போடாமல் இயற்கை விவசாயம் மூலம் மேற்கொண்டு வருகிறேன். நெல் நடவுக்கு முன்பு, வேம்பு இலை, வாகை இலை ஆகியவற்றை நிலத்தில் போட்டு உழுது அதன்பிறகு நடவு பணி துவங்குகிறது. இதனால், இயற்கையான அரிசி நமக்கு கிடைக்கிறது, என்றார்.இவரை தொடர்பு கொள்ள 94874 13100.-டி.செந்தில்குமார், காரைக்குடி. 

இயற்கை விவசாயத்தில் பார்த்தீனியம்

பல தென்னந்தோப்புகளில் விவசாயிகள் பார்த்தீனியத்தை ஒரு எதிரியாக பாவித்து அதனை கங்கணம் கட்டிக்கொண்டு அழித்திட அதிக காசு செலவு செய்து களைக்கொல்லி மருந்து தெளித்து கடும் நஷ்டத்துக்கு ஏன் மண்ணின் உயிர்க்குலங்கள் நாசமாகி மலடாகி தென்னந்தோப்பே வறண்ட காடு போலக்காட்சியளித்திடச் செய்கிறார்கள். இறைவன் தந்த வரங்கள் தான் தாவரங்கள். அதில் தானாக வளரத் திறன் கொண்ட தாவரமான பார்த்தீனியம் நம்மால் தான் நிலத்துக்கு கொண்டு வரப்பட்டது என்பது விசித்திரமான உண்மையாகும்.அரை அடி முதல் 3 அடி வரை மண் கண்டத்துள்ளே அங்கிங்கெணாதபடி களை விதைகள் பல்கி பரவிக் கிடப்பதே அரைகுறையான மட்காத குப்பை உரத்தை இடுவதால் தான். ஆம், கால்நடை உண்ட களைச்செடி விதைகள் சாணத்துடன் வெளியே வந்து பத்திரமாக மேற்பரப்பில் பதப்படுத்தப்பட்டு பிறகு எடுத்து வீசும்போது நீரைக்கண்டதும் குப்பென்று வளர்ந்து விடுகிறது. எனவே களைகள் வரும் இந்த வழியை மாற்றி யோசித்து மண்புழு உரமாக இட்டால் நிச்சயம் களைக்கு வேலையில்லை.அப்படியே களைகள் வந்தாலும் அதனை முறையாக சேகரம் செய்து மட்கம் செய்து மகத்தான உரமாக மீளப்பயன்படுத்தலாம். இதற்கு எந்தக் களையானாலும் விதிவிலக்கல்ல. நல்ல இலைப்பரப்பு அதிகம் கொண்ட பசுந்தழைகள் அடங்கிய பலவித மரங்களின் இலைகளையும் சேகரம் செய்து பார்த்தீனியம் மற்றும் இதர புல்வகைச் களைகளையும் களை நீக்கும் கருவிகள் கொண்டு அறுத்து வதங்க வைத்து அப்புறப்படுத்தி பதப்படுத்தி மண்புழு உரக்குழியில் இட்டு மண்புழு உரமாக மாற்றலாம். அல்லது இதற்கு கம்போஸ்ட் குழி தயாரித்திட எல்லா இடத்திலும் வாய்ப்புள்ளது. நீளம் 15 அடி அகலம் 8 அடி மற்றும் ஆழம் 3 அடி உள்ள குழிகள் தோண்டினால் ஒரு ஏக்கருக்குத் தேவையான உரம் பெற வாய்ப்புள்ளது.திடல்கள், சேமிப்பு கூடங்கள் மற்றும் நடைபாதைகள், கல்வி சாலைகள், பூங்காக்கள் பேருந்து நிறுத்தங்கள் இங்கு வளர்ந்துள்ள பார்த்தீனியத்தை 10 லிட்டர் தண்ணீரில் 1.5 கிலோ சாப்பாட்டு உப்பு கரைத்து தெளித்து சுத்தமாக அழிக்கலாம். உயிரியல் முறைப்படி "சைக்கோகிரம்மர்' எனும் புள்ளி உடைய ஈச்சங்காய் போன்ற மஞ்சள் வண்ண வண்டுகளை சேகரம் செய்து பார்த்தீனியம் உள்ள இடத்தில் மெதுவாக அவற்றை சுத்தமாக அழிக்கலாம்.களை வரும் முன்பே முந்தி ஊடுபயிர், மூடு பயிர், வரப்பு பயிர் மற்றும் நிலப்போர்வை அமைத்தல் மூலம் பார்த்தீனியம் தரும் பாதிப்பை வெகுவாகக் குறைக்கலாம். மேலும் விவரம் பெற 98420 07125 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.- டாக்டர். பா.இளங்கோவன்உடுமலை, திருப்பூர் மாவட்டம்.

Wednesday, 28 January 2015

கத்தரி பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம்!

விவசாயிகள் தற்போதைய பருவத்துக்கு ஏற்ற தோட்டப் பயிரான கத்தரிக்காயை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என வேளாண் துறையினர் யோசனை தெரிவித்தனர்.இதற்கான வழிமுறைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்:பயிரிடும் காலம்: நாள் தோறும் மக்களின் பயன்பாட்டில் அதிகம் உள்ள காய் கத்தரி. இதை டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொடங்கி மே வரை பயரிடலாம்.மண்ணின் தன்மை: நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்தரி பயிரிட ஏற்றதாகும்.விதை நேர்த்தி: ஒரு ஹெக்டேருக்கு 200 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் வீதம் கலக்க வேண்டும். அசோல் பைரில்லம், பாஸ்போபேக்டீரியா ஒவ்வொன்றையும் 100 கிராம் வீதம் கலந்து நிழலில் அரைமணி நேரம் வைக்க வேண்டும்.இடைவெளி, செடி எண்ணிக்கை: பொதுவாக கத்தரி ரகத்தின் தன்மையைப் பொறுத்து இடைவெளி, செடியின் எண்ணிக்கை மாறுபடும். மிதமான வளர்ச்சி உள்ள ரகங்களை 4 அடி அகலமுள்ள மேட்டுப் பாத்தியில் ரெட்டை வரிசை முறையில் 60 ல 60 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.அதிக வளர்ச்சியுள்ள ரகங்களை உயர் பாத்தியில் ஒரு வரிசையில் ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் 45 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.நடவு முறை : நாற்றுக்களை நடுவதற்கு முன்பு 8 முதல் 12 மணி நேரம் உயர் பாத்திகளை சொட்டு நீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தி நன்கு நனைக்க வேண்டும். நாற்றுக்களை மேற் குறிப்பிட்ட இடைவெளியில் நட வேண்டும். நடவு செய்த ஒரு வாரத்துக்குப் பின்பு இடைவெளி இருப்பின் அங்கு புதிய நாற்றுக்களை நடலாம்.நீர்ப் பாசனம், நீர்வழி உரமிடல்: தினமும் சொட்டு நீர்ப் பசான முறையில் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தேவையான அளவு நீரில் கரையும் உரத்தை அட்டவணையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சொட்டு நீர்ப் பாசனத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரத் தொட்டியின் மூலம் இட வேண்டும்.பின்னால் செய்ய வேண்டிய நேர்த்தி: நடவு செய்த 30-வது, 60-வது நாளில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். டிரையகாண்டனால் 125 மில்லி 30-வது நாளில் இருந்து 15 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும். பூப் பிடித்தலை அதிகரிக்க என்ஏஏ. 0.25 பிளோனோபிக்ஸ் என்ற அளவில் பூப் பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும்.அறுவடை, மகசூல்: மேற்கண்ட முறைகளை விவசாயிகள் கையாண்டால் 50 முதல் 120 நாள்கள் வரை மகசூல் அறுவடை செய்யலாம். வீரீய ஒட்டு ரகத்தில் ஹெக்டேருக்கு 40 முதல் 50 டன்கள் வரை மகசூல் கிடைக்கும். கத்தரி அறுவடை ரகத்திற்கேற்ப நாள்கள் மாறுபடும் என்று வேளாண் துறையினர் கூறியுள்ளனர்.

அக்ரிடோன் 4.5' இயற்கை உரம் அறிமுகம்

பயிர் விளைச்சலை அதிகரிக்க உதவும் "அக்ரிடோன் 4.5' என்ற இயற்கை உரத்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.இதுதொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் "பி.எம்.பயோ எனர்ஜி' நிறுவனம் தயாரித்த "அக்ரிடோன் 4.5' இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியது:மண் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்த தகுந்த உரத் தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும்.மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் காற்றிலுள்ள தழைச் சத்தை உள்வாங்கி மண்ணில் நிலை நிறுத்தி பயிர்களுக்கு அளிக்கின்றன.இயற்கையாக மட்கும் பொருள்கள் இல்லாவிட்டால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறையும்.எனவே, அதன் வளம் குன்றாமல் பாதுகாப்பது விவசாயிகளின் கடமையாகும். இதை ஐ.நா. சபை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "அக்ரிடோன் 4.5' உரம் அனைத்து வகையான காய்கறிகள், பருவநிலைக்கு ஏற்றதாகும்.தோட்டப் பயிர்கள், தானியங்கள், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள், நாற்றங்கால் பண்ணைகள் ஆகியவற்றுக்கு இதைப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.பூமிக்கடியில் உள்ள பழுப்பு நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் கழிவுப் பொருளான "அக்ரிடோன் 4.5' இயற்கையான தண்ணீரில் கரையக் கூடியது. இந்த உரத்துக்கான தொழில்நுட்பத்தை நெய்வேலி பழுப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பரிசோதித்து விளைச்சலை அதிகரிக்கவும், தரமான பொருள்களை உற்பத்தி செய்யவும் உதவும் என சான்றிதழ் வழங்கியுள்ளது என "பி.எம்.பயோ எனர்ஜி' நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

Sunday, 11 January 2015

வெளிநாடுகளுக்கு வெண்டை: தேனி விவசாயி சாதனை

வெண்டை சாப்பிட்டால் அறிவு வளரும் என்பது பரவலான நம்பிக்கை. அந்த வெண்டையை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து செல்வத்தை வளர்த்திருக்கிறார் தேனி விவசாயி.தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, புள்ளிமான்கோம்பை, அணைக்கரைப்பட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட ஊர்களில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் விளையும் வெண்டைக்காய் பெரும்பாலும் உள்ளூர், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகிறது. - விவசாயி பால்ராஜ்20 ஆண்டுகளாக வெண்டைஇந்நிலையில் ஆண்டிப்பட்டி அருகே புள்ளிமான் கோம்பையைச் சேர்ந்த விவசாயி பி. பால்ராஜ் சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு வெண்டைக்காய் ஏற்றுமதி செய்கிறார்.ஆண்டு முழுவதும் வெண்டை சாகுபடி செய்யலாம். இவருக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் 20ஆண்டுகளாக வெண்டை சாகுபடி செய்துவருகிறார். ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ஒன்றே கால் கிலோ விதை தேவை.உழவு, மருந்து, களையெடுத்தல் ஆகியவற்றுக்குப் பின் ஒன்றரை மாதத்தில் வெண்டைக்காய் பறிக்கத் தயாராகி விடும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பறிக்கத் தொடங்கலாம். வாரத்துக்கு ஒரு முறை மருந்து அடிக்கவேண்டும். சராசரியாக ஒரு வாரத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை வெண்டை கிடைக்கும். மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து காய் பறிக்கலாம்.தரம் முக்கியம்"செலவு போக வாரத்துக்கு ரூ.10 ஆயிரம்வரை லாபம் கிடைக்கும். வரத்து அதிகமானால் விலை சரியத் தொடங்கிவிடும். மேலும் வாகனச் செலவு, காய்களை மூட்டை போடச் சாக்கு, கமிஷன் மண்டிக்குக் கொடுக்க வேண்டிய கமிஷன் எனக் கூடுதல் செலவு ஏற்பட்டு வந்தது. இதனால் கவலைப்பட்டு கொண்டிருந்தோம்.இந்நிலையில் காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் ஏஜென்ட்களோ, வெண்டையைப் பறித்துக் கொடுத்தால்போதும் தாங்களே மற்றச் செலவுகளை ஏற்றுக்கொண்டு அன்றைய சந்தை விலையைவிட கிலோவுக்கு ரூ.10 கூடுதலாகக் கொடுத்து எடுத்துக்கொள்வதாகக் கூறினர். கடந்த ஓராண்டாக அவர்களிடம் கொடுத்து வருகிறோம். ஒரே விஷயம் வெண்டை நல்ல தரத்தில் இருக்க வேண்டும்" என்கிறார்.சாகுபடி அதிகரிப்புஇப்படி வாங்கப்படும் வெண்டை 10 கிலோ எடையுடன் தனித்தனிப் பெட்டிகளில் அடைத்து விமானம் மூலம் சிங்கப்பூர், துபாய் என வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது."எனது ஆலோசனையைக் கேட்ட பல விவசாயிகள் வெண்டை சாகுபடி செய்து ஏற்றுமதி மூலம் அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது வெண்டை சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. உசிலம்பட்டி, தர்மத்துப்பட்டி பகுதி விவசாயிகளும் வெண்டை சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்" என்றார்.பால்ராஜை தொடர்புகொள்ள: 86081 44255

பூஜைக்கு ஏற்ற பூவன்...

பழத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம்... இலையில் 1 லட்சத்து 98 ஆயிரம்!

வாழைப்பழங்களில் பல ரகங்கள் இருந்தாலும் பெரும்பாலும் பூஜைக்கு பூவன் வாழையைத்தான் பயன்படுத்துவார்கள். ஆண்டு முழுவதுமே வாழைப்பழங்களுக்குத் தேவை இருந்தாலும்... பொங்கல் சமயத்தில் பூவன் வாழைக்கு நல்ல கிராக்கி இருக்கும். அதிலும் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் விளையும் பூவன் வாழைக்கு தனி மரியாதை. இப்பகுதியின் பிரத்யேக தட்பவெப்ப நிலையால் இந்த வாழை, புள்ளிகள் இல்லாமல், திரட்சியாக இருப்பதுடன் கூடுதல் சுவையும் கொண்டிருப்பதுதான் கிராக்கிக்குக் காரணம்.பொங்கல் சமயத்தில் திருவையாறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான வாழைத்தார்கள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கின்றன. இப்படி பயணிக்கும் தார்களில், திருவையாறு தாலூகா, கடுவெளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ்குமாரின் இயற்கை விவசாய வாழைத்தார்களும் அடக்கம்.

இயற்கையிலேயே விளையும்!
ஒரு மதிய வேளையில் ராஜ்குமாரைச் சந்தித்தபோது, ''காவிரி ஆத்தங்கரையில் இருக்கறதால நிலங்கள்ல வண்டல் நிறைஞ்சிருக்கு. அதனால வாழை நல்லா வேர் பிடிச்சு செழிப்பா வளருது. மத்த பகுதிகள்ல எல்லாம் தார் விட ஆரம்பிச்ச பிறகுதான் மரம் எட்டு அடி உயரத்தைத் தொடும். ஆனா, எங்க பகுதி பூவன் வாழை மரங்கள் தார் விடுறதுக்கு முன்னயே எட்டு அடிக்கு மேல வளந்துடும். இந்தப் பகுதியில குறைவான அளவுலதான் ரசாயன உரம் பயன்படுத்துறாங்க. ஆனா, மண் வளமா இருக்குறதால இயற்கை முறையிலேயே மரம் அருமையா வளரும்'' என்ற ராஜ்குமாரின் வார்த்தைகளுக்கு வலு சேர்த்தன, அவரது தோப்பில் உயர்ந்து நிற்கும் வாழை மரங்கள்.

வழிகாட்டிய பசுமை விகடன்!

''2007-ம் வருஷத்திலிருந்தே 'பசுமை விகடன்’ படிச்சுட்டு இருக்கோம். அதைப்படிக்க ஆரம்பிச்ச பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரசாயன உரத்தைக் குறைக்க ஆரம்பிச்சோம். இப்போ, நாலு வருஷமா முழு இயற்கை முறையில 5 ஏக்கர்ல பூவன் வாழை சாகுபடி செஞ்சுட்டு இருக்கோம். 8 ஏக்கர்ல நெல் இருக்கு. அதை இன்னும் முழுமையா இயற்கைக்கு மாத்தல. ஆனா, சுத்தமா ரசாயன பூச்சிக்கொல்லியைக் கைவிட்டுட்டோம்' என்ற ராஜ்குமார், இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்யும் விதங்களைச் சொன்னார். அது பாடமாக இங்கே...

ஏக்கருக்கு 1,000 கன்றுகள்! '

ஏக்கருக்கு 5 டன் மாட்டு எருவை இட்டு, நான்கு சால் உழவு ஓட்டி, வரிசைக்கு வரிசை, கன்றுக்கு கன்று ஆறரை அடி இடை வெளி இருக்குமாறு அரை அடி ஆழத்துக்கு குழி பறித்து வாழை விதைக்கன்றுகளை நடவு செய்யவேண்டும். இந்த இடைவெளியில ஏக்கருக்கு கிட்டத்தட்ட ஆயிரம் கன்றுகளை நடவு செய்யலாம். நடவு செய்த 3ம் மாதம் ஒவ்வொரு கன்றுக்கும் அரை கிலோ வீதம், மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு கொடுக்க வேண்டும் (350 கிலோ மாட்டு எருவோடு தலா 50 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து தினமும் லேசான ஈரம் இருக்குமாறு தண்ணீர் தெளித்து 45 நாட்கள் வைத்திருந்தால் மேம்படுத்தப்பட்ட எரு தயார்). இதேபோல 5 மற்றும் 7-ம் மாதங்களில் தலா ஒரு கிலோ மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு கொடுக்க வேண்டும். இதைத்தவிர வேறு எந்த இடு பொருட்களும் கொடுக்கத் தேவையில்லை.

பூச்சி, நோய் தாக்காது!

இயற்கை முறை என்பதால், வேர்ப்புழு, நூற்ப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் வாடல் நோய் உள்ளிட்ட தொந்தரவுகளும் கூட கட்டுப்படும். தவிர்க்க முடியாமல் மட்டைக் காய்ச்சல் நோய் வந்தால்...3 லிட்டர் ஜீவாமிர்தத்தில் தலா 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து, இக்கரைசலை 200 லிட்டர் தண்ணீர்ல கலந்து மட்டைகளில் தெளித்தால், நோய் குணமாகி விடும். நடவு செய்த 7-ம் மாதம் தார் விடத்தொடங்கும். 8- ம் மாதம் 13 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தார்கள் மீது தெளிக்க வேண்டும். இந்த அளவு 40 தார்களுக்கு சரியாக இருக்கும். தொடர்ந்து 15 நாட்கள் இடைவெளியில இரண்டு முறை தெளிக்க வேண்டும். தார் விட்ட 90 முதல் 100 நாட்கள்ல தார் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்குத் தயாராகி விடும்.''

பூச்சி, நோய் தாக்காது!

இயற்கை முறை என்பதால், வேர்ப்புழு, நூற்ப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் வாடல் நோய் உள்ளிட்ட தொந்தரவுகளும் கூட கட்டுப்படும். தவிர்க்க முடியாமல் மட்டைக் காய்ச்சல் நோய் வந்தால்...3 லிட்டர் ஜீவாமிர்தத்தில் தலா 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து, இக்கரைசலை 200 லிட்டர் தண்ணீர்ல கலந்து மட்டைகளில் தெளித்தால், நோய் குணமாகி விடும். நடவு செய்த 7-ம் மாதம் தார் விடத்தொடங்கும். 8- ம் மாதம் 13 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தார்கள் மீது தெளிக்க வேண்டும். இந்த அளவு 40 தார்களுக்கு சரியாக இருக்கும். தொடர்ந்து 15 நாட்கள் இடைவெளியில இரண்டு முறை தெளிக்க வேண்டும். தார் விட்ட 90 முதல் 100 நாட்கள்ல தார் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்குத் தயாராகி விடும்.''

ஒரு தார் 200 ரூபாய்!
சாகுபடிப்பாடம் முடித்த ராஜ்குமார், 'ஒவ்வொரு தாரும் இரண்டரை அடியில இருந்து 4 அடி உயரம் வரை இருக்கும். ஒரு தார் சராசரியா 18 கிலோ எடை இருக்கும். ஒரு தாருக்கு சராசரியா 200 ரூபாய் கிடைக்கும். ஒரு ஏக்கர்ல ஆயிரம் மரங்கள் வளர்ந்தா, சராசரியா 700 தார்கள் நல்ல முறையில வளர்ந்து விற்பனைக்குத் தேறும். வேலி ஓரங்கள்ல இருக்குற மரங்கள்ல தார் சுமாராத்தான் இருக்கும். அந்த வகையில சுமாரான தரத்துல 200 தார்கள் கிடைக்கும். இதுக்கு விலையும் குறைவாத்தான் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்றப்போ... ஒரு ஏக்கர்ல பூவன் வாழை மூலமா 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக, 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிகரலாபம்.

இரண்டாம் போகத்தில் இலை மூலம் வருமானம்!தார் அறுத்து முடிச்ச பிறகு, மட்டை களை மட்டும் நீக்கிட்டு, தாய் மரத்தின் தண்டுப்பகுதியை விட்டுடுவோம். அடுத்த போகத்துல இலை மூலமா வருமானம் எடுப்போம். ஒவ்வொரு தாய் மரத்துல இருந்தும் அஞ்சுல இருந்து ஏழு பக்கக் கன்றுகள் உருவாகும். இதுல 4 கன்றுகள் மட்டும் தரமா வளரும். அந்த கன்றுகள்ல மூணாவது மாசத்துல இருந்து இலைகளை அறுவடை செய்யலாம். ஒரு மரத்துல இருந்து மாசத்துக்கு குறைந்தபட்சம் 2 இலைகள் கிடைக்கும். ஒரு முழு இலை 7 அடி நீளம் இருக்கும். ஒரு இலை 6 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும். ஒரு ஏக்கர்ல மாசத்துக்கு 4 ஆயிரம் இலைகள் கிடைக்கும். இதை விற்பனை செய்றப்போ 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அறுப்புக்கூலி உள்ளிட்ட செலவுகள் 7 ஆயிரத்து 500 ரூபாய் போக, மாசத்துக்கு நிகர லாபமாக, 16 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைச்சுடும்' என்ற ராஜ்குமார் நிறைவாக, ''இயற்கை விவசாயத்துல மரத்தின் வேரும், தண்டும் நல்லா உறுதியா திடகாத்திரமா இருக்குறதுனால, என்னதான் வேகமா காத்த டிச்சாலும் இங்க உள்ள வாழை மரங்கள் முறியறதில்லை. இதனால் ஒரு மரத்துக்கு 55 ரூபாய் வீதம் முட்டுக்கால் கொடுக்குற செலவும் மிச்சம். இயற்கை இப்படி எனக்கு லாபத்தைக் கொடுக்கறதால, இனி நெல் சாகுபடியையும் முழுக்க இயற்கைக்கு மாத்தப்போறேன்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,ராஜ்குமார், செல்போன்: 87604-72815.

Thursday, 8 January 2015

குருத்துப் பூச்சியில் இருந்து நெல் பயிரை காப்பது எப்படி

தற்போதைய பருவத்தில் குருத்துப் பூச்சியின் தாக்குதலால், நெல் பயிர்கள் அதிகளவில் சேதம் ஏற்படும் வாய்ப்புள்ளதால், அதற்கான மேலாண்மை முறைகளை விவசாயிகள் கையாள வேண்டும் என திரூர் நெல் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியரும், தலைவருமான அகிலா அறிவுறுத்தினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் குருத்துப் பூச்சியின் தாக்குதல் ஜனவரி மாதத்தில் அதிக அளவில் இருக்கும். இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைய வாய்ப்பிருக்கும். எனவே விவசாயிகள் கவனத்துடன் தங்களது பயிர்களைக் கண்காணித்து குருத்துப் பூச்சி மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.தாக்குதல் அறிகுறிகள்: இளம் புழுக்கள் இளம் பயிரின் தண்டில் துளையிட்டு உள் சென்று அதன் அடிபாகத்தில் இருந்து கொண்டு உள் பகுதியைக் கடித்து உண்பதால் இளம் பயிரின் நடுக்குருத்து வாடிக் காய்ந்து விடும்.பூக்கும் பருவத்தில் கதிர் காய்ந்து மணி பிடிக்காமல் வெண்ணிறக் கதிர்களாக மாறும். இது வெண்கதிர் சேதம் ஆகும்.வாடியக் குருத்து அல்லது வெண் கதிரைப் பிடித்து இழுத்தால் எளிதில் வந்து விடும். பொருளாதார சேத நிலை ஒரு சதுர மீட்டருக்கு இரண்டு முட்டைக் குவியல்கள் ஆகும். காய்ந்த நடுக்குருத்து 10 சதவீதமும், வெண்கதிர் 2 சதவீதமும் ஏற்படும்.மேலாண்மை முறைகள்: அறுவடை செய்தபின் தாள்களை மடக்கி உழுவதன் மூலம் புழுக்களையும், கூட்டுப் புழுக்களையும் அழிக்கலாம்.நடுவதற்கு முன் நாற்றுக்களின் நுனியைக் கிள்ளி முட்டைக் குவியல்களை அழிக்க வேண்டும்.மண் பரிசோதனை செய்து வேளாண் அதிகாரிகளின் ஆலோசனையின்பேரில் தழைச் சத்து உரம் இட வேண்டும்.மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வயலில் விளக்குப் பொறி அமைக்க வேண்டும்.ஒரு ஹெக்டேருக்கு 12 வீதம் இனக் கவர்ச்சிப் பொறி அமைக்க வேண்டும். டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஒரு வார இடைவெளியில் மூன்று முறை வெளியிடவும்.பூச்சித் தாக்குதல் பொருளாதார சேத நிலையை அடையும் போது கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்குத் தெளிக்க வேண்டும்.மேலும் ப்ளுபென்டிமைடு 39.35 எஸ்.சி 50 மில்லி லிட்டர், கார்டாப்ஹைட்ரோ குளோரைடு 50 எஸ்பி -1000 மில்லி லிட்டர், குளோரன்டிரினிலிப் ரோல் 18.5 எஸ்.சி 150 மில்லி லிட்டர், டிரை அசோபாஸ் 40 625 மில்லி லிட்டர், பிப்ரோனில் 5 எஸ்.சி 1000 மில்லி லிட்டர் ஆகியவை இட வேண்டும்.

பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!

பசுக்கள் வளர்க்கும் விவசாயிகள் கம்பி நேப்பியர் ஒட்டுப்புல் என அழைக்கப்படும் சி.என். 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதால் பால் உற்பத்தியை எளிதாகப் பெருக்கலாம்.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இந்த ரகம், குறைந்த பரப்பில் அதிக மகசூல் தரும் புல் ரகமாகும்.இந்த தீவனப் பயிரை உற்பத்தி செய்வதால் குறைந்த இடத்தில் அதிக பசுந்தீவன புல்லை உற்பத்தி செய்து பால் உற்பத்தியைப் பெருக்கலாம் என காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் தெரிவித்துள்ளார்.அவரது தகவல்கள்: கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், அதிகத் தூர்களுடன் வளரக்கூடிய ஒரு பல்லாண்டு தீவனப் பயிராகும். தண்டுகள் மிகவும் மிருதுவான, இனிப்பான, சாறு நிறைந்த, குறைந்த நார்ச்சத்தைக் கொண்டவை.அதிக தூர்களுடன் (செடிக்கு 30 முதல் 35 தூர்கள்) சாயாத் தன்மை கொண்டது. அகலமான, மிருதுவான இலைகள் அதிக இலை தண்டு விகிதம் கொண்டவை.இவ்வகை பயிரை எளிதில் பூச்சிகள், நோய்கள் தாக்காது. அதிக உலர் தீவன மகசூல், புரதச்சத்து கொண்டவை. ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம். இதனால் ஏக்கருக்கு 350 முதல் 400 டன் அளவுக்கு மகசூல் பெறலாம். பசுந்தீவனத்தின் முக்கியத்துவம்: கால்நடைகளுக்குப் பசுந்தீவனப் புற்கள் கொடுப்பதால் பால் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் ஏ எனும் உயிர்ச்சத்து கிடைக்க வழிவகை ஏற்படுகிறது. கால்நடைகளின் கண்பார்வை, சுவாச மண்டலத்தின் செயல்பாடுகள் மேம்படுகிறது. மேலும், கால்நடைகளின் கரு உருவாவதற்கும், உருவான கருவைத் தக்க வைப்பதற்கும் பசுந்தீவனப் புற்கள் வழிவகை செய்கின்றன. சாகுபடி தொழில்நுட்பம்: ஆண்டு முழுவதும் எல்லா வகை மண் வகைகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் புல்லைப் பயிரிடலாம். நிலத்தை இரும்புக் கலப்பையைக் கொண்டு 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும்.மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்களை இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால், 1 ஏக்கருக்கு அடியுரமாக 25 டன் மக்கிய தொழுஉரம், 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதால் மகசூலை நிலை நிறுத்தலாம்.பாத்திகள் அமைக்கப்பட்ட நிலத்தில் நன்கு நீர்ப் பாய்ச்சிய பின் தண்டுக்கரணையை 60-க்கும் 50 செ.மீ. இடைவெளியில் செங்குத்தாக நடவு செய்ய வேண்டும்.இவ்வாறு நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 33 ஆயிரத்து 333 கரணைகள் தேவைப்படும். கரணை நட்ட 3ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.பிறகு 10 நாள்களுக்கு 1 முறை நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.கரணை நட்ட 20ஆவது நாள் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். நடவுக்குப் பின் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அடுத்தடுத்து 45 நாள்களிலும் தீவனப் பயிர்களை அறுவடை செய்யலாம்.இவ்வாறு சாகுபடி மேற்கொண்டால், 1 ஹெக்டேரில் 1 ஆண்டுக்கு 7 அறுவடைகளில் 350 முதல் 400 டன் பசுந்தீவன மகசூல் உற்பத்தி செய்யலாம். எனவே கறவைமாடு வளர்க்கும் விவசாயிகள் குறைந்தபட்ச நிலத்திலாவது, கோ (சிஎன்) 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தியை எளிதாக பெருக்கலாம். மேலும் நகர்புற அருகில் உள்ள விவசாயிகள் இப்புல்லை உற்பத்தி செய்து, பசும்புல்லை, ஒரு கிலோ ரூ. 3 வரையில் விற்பனை செய்யலாம். இந்தப் புல்லில் தண்டுக்கரணை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியரை 98844 02613 என்ற கைப்பேசி எண்ணிலோ, 044 - 2745 2371 என்ற தரைவழி தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார் முருகன்.

Saturday, 3 January 2015

கரும்பு




சாகுபடி உத்திகள் கரும்பு பருவம் மற்றும் இரகங்கள்தமிழ்நாட்டில் கரும்பு பொதுவாக டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மூன்று பட்டங்களில் அதிகமாக நடவு செய்யப்படுகின்றது. இது தவிர திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை தனிப்பட்டமாக கரும்பு நடவு செய்யப்படுகிறது. பருவத்திற்கு ஏற்ப பட்டங்கள் பின்வருமாறு பிரிக்கப்படுகிறது.முன்பட்டம் - டிசம்பர் - ஜனவரிநடுப்பட்டம் -    பிப்ரவரி - மார்ச்பின்பட்டம் - ஏப்ரல் - மேதனிப்பட்டம் - ஜீன் - ஜீலைமுன்பட்டத்திற்கு ஏற்ற இரகங்கள் தனிப்பட்டத்திற்கும் உகந்தவையாகும்

கரும்பு நடவு வயல் தயாரிப்பு1. நடவு வயல் தயாரிப்பு

அ.களிமண்நிலம்பொதுவாக களி மண் வயல்களில் நல்ல பொலபொலப்புத் தன்மை பெறும் வகையில் உழவு மேற்கொள்ள முடிவதில்லைநெல் அறுவடைக்குப் பிறகு வயலின் குறுக்காகவும் வயலைச் சுற்றியும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் பாத்திகள் 6 மீட்டர் இடைவெளியில் 40 செ.மீ.ஆழம் மற்றும் 30 செ.மீ. அகலத்தில் அமைத்திட வேண்டும்நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் மண்வெட்டி கொண்டு அமைத்திட வேண்டும்நடவு சாலினை 4 முதல் 5 நாட்கள் வரையிலும் களைகொத்தி கொண்டு கிளறி விடுதல் வேண்டும்அதிக தண்ணீர் தேங்கி பிரச்சினையாகும் நிலங்கள்அதிகமாக தண்ணீர் தேங்கி நின்று மற்றும் அதனை வடித்து வெளியேற்ற முடியாத வயல்களில் 30 செ.மீ.இடைவெளியில் 5 மீட்டர் நீளம், 80 செ.மீ. அகலம் மற்றும் 15 செ.மீ. உயரம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்திட வேண்டும்.உ.இருமண் மற்றும் மணல்சாரி தோட்டக்கலை நிலங்கள்ஆரம்பத்தில் இரண்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும். தொடர்ந்து எட்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும் மற்றும் உழும் கருவி பயன்படுத்தி ஆழ உழ வேண்டும். தொடர்ந்து ஒரு முறை சுழல் கலப்பை கொண்டு மண்ணை பொலபொலப்பாக்கி பண்படுத்துவதன் மூலம் களை மற்றும் பயிர்தூர் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.சீரான முறையில் நீர்ப்பாசனம் செய்திட நிலத்தினை நன்கு சமன்படுத்த வேண்டும்நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் விக்டரி அல்லது பார் அமைக்கும் கலப்பை கொண்டு அமைக்க வேண்டும். நடவு சால்கள் 20 செ.மீ.  ஆழம் உடையதாக இருத்தல் வேண்டும்நீர்ப்பாசன வாய்க்கால்கள் 10 மீட்டர் இடைவெளியில் இருத்தல் வேண்டும்2. அடியுரமாக அங்கக உரங்கள் இடுதல்தோட்டக்கால் நிலங்களில் கடைசி உழவிற்கு முன்னதாக தொழுஉரம் 12.5 டன்/ எக்(ஆழ் குப்பை உரம் 25 டன்/ எக்(அ) ஆலை அழுக்கு 37.5 டன்/ எக் என்ற அளவில் இட வேண்டும். களி மண் நிலங்களில் மேற்கண்ட அங்கக உரங்களை நடவு சால்களில் இட்டு நன்கு கலந்து விடவேண்டும்.கரும்புத் தோகை மற்றும் ஆலை அழுக்கு கொண்டு ஊட்டமேற்றிய குப்பை எரு தயாரித்தல்காய்ந்த கரும்புத் தோகையை 15 செ.மீ. உயரத்திற்கு சுமார் 7 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலப் பாத்திகளாக பரப்பவும். அதற்கு மேல் 5 செ.மீ. உயரத்திற்கு கரும்பு ஆலை அழுக்கினை பரப்பி விடுதல் வேண்டும். மசூரி ராக் பாஸ்பேட், ஜிப்சம் மற்றும் யூரியா உரங்களை முறையே 2:2:1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து தோகை மற்றும் ஆலை அழுக்கு அடுக்கின் மீது 100 கிலோ தோகைக்கு 5 கிலோ உரக்கலவை என்ற விகிதத்தில் பரவலாகத் தூவி விட வேண்டும். பின்னர் அடுக்கு முழுவதும் நன்கு நனையும் வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள இடுபொருள்கள். ஒவ்வொன்றையும் அதே அளவில் மற்றும் அதே முறையில் திரும்பவும் கொடுத்து கடைசியாக அடுக்கின் மொத்த உயரம் 1.5 மீட்டர் அளவு வருமாறு செய்ய வேண்டும். தண்ணீர் தெளிப்பதற்கு பதிலாக கிடைக்கும் இடங்களில் தொழு உரக் கரைசல் பயன்படுத்தலாம். பின்னர் அடுக்கு முழுவதையும் மண் மற்றும் ஆலை அழுக்கு முறையே 11 என்ற விகித அளவில் கலந்த கலவை கொண்டு 15 செ.மீ. உயர அளவிற்கு மூடி விட வேண்டும். இவ்வடுக்கினை மூன்று மாதத்திற்கு மக்குவதற்காக அப்படியே விட்டுவிடவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை அடுக்கு முழுவதும் நனையும் வண்ணம் நீர் தெளிக்க வேண்டும். மூன்று மாதமானதும் அடுக்கினை புரட்டி பின்னர் நன்கு கலந்து விட்டு ஒரு மாதத்திற்கு அப்படியே விட வேண்டும். நான்காவது மாத முடிவில் மறுபடியும் புரட்டி விட்டு பின் கலந்து 5வது மாத முடிவு வரை 15 நாள் இடைவெளியில் தண்ணீர் தெளிக்க வெண்டும். இம்முறையில் தயாரிக்கப்படும் கரும்புத்தோகை கம்போஸ்டில் தழை, மணி மற்றும் கால்சியம் சத்துக்களின் அளவு அதிகமாக இருப்பதோடு கரிமம் மற்றும் தழைச்சத்தின் விகிதாச்சாரம் கரும்புத் தோகையின் அளவை விட 10 மடங்கு குறைவாக இருக்கும்.

 அடியுரமாக இரசாயன உரங்கள் இடுதல்மண் பரிசோதனை செய்யப்படவில்லையெனில் பொதுப்பரிந்துரையாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 300:100:200 கிகி அளிக்க வேண்டும். சூப்பர் பாஸ்பேட்                    (625 கிகி/எக்டர்) மண்வெட்டி கொண்டு அளிக்க வேண்டும். துத்தநாக சத்து மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடு உள்ள வயல்களில் முறையே 37.5 கிலோ/எக் துத்தநாக சல்பேட் மற்றும் 100 கிலோ/எக் பெரஸ் சல்பேட் இடுதல் வேண்டும். கந்தக பற்றாக்குறையுள்ள மணலில் ஜிப்சம் வடிவில் கந்தகத்தை எக்டருக்கு 500 கிகி அளிப்பதன் மூலம் கரும்பு விளைச்சல் மற்றும் சாறின் தரத்தை உயர்த்தலாம்.ஐ.ஏ.நடவு வயல் பராமரிப்பு1.கரும்பு நடவிற்கு விதைக்கரணை தயாரித்தல்விதைக்கரணைகளை, நோய் மற்றும் பூச்சிகள் தாக்காத 6 முதல் 7 மாதமுடைய விதை நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்விதைக்கரணைகளில் ஒட்டியிருக்கும் காய்ந்த தோகைகளை ஆட்கள் கொண்டு கைகளால் நீக்க வேண்டும்பிளவு இல்லாத விதை கரணைகளை பெற கூர்மையான கத்தி அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கரணை வெட்டும் இயந்திரம் பயன்படுத்த வேண்டும்.விதைக்கரணைகள் பக்கவாட்டில் விளந்து விடாமல் இருக்க கூரிய கத்தி கொண்டு தயார் செய்திடல் வேண்டும்அடிப்பட்ட பருக்கள், பருக்கள் முளைத்த மற்றும் பிளவுபட்ட விதைக்கரணைகளை நீக்கி விட வேண்டும்அசோஸ்பைரில்லம்

 விதை நேர்த்தி:
நடவுக்கு முன்னர் 10 பொட்டலங்கள் (2 கிலோ/எக்) அஸோஸ்பைரில்லம் நுண்ணுயிருடன் தேவையான அளவு நீர் கலந்து அக்கலவையில் கரும்பு விதைக்கரணைகளை 15 நிமிடம் வரையில் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்2. கரணை நேர்த்திஆரோக்கியமான கரணைகளைத் தேர்வு செய்திடவேண்டும்கரணைகளை 100 லிட்டர் தண்ணீரில் 50கி கார்பன்டிசம், 200மிலி மாலதியான் மற்றும் 1கிகி யூரியா கலந்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.கரணைகளை புல்தண்டு நோயிலிருந்து பாதுகாத்திட 1 மணி நேரத்திற்கு 50 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவில் வெப்ப நீராவி நேர்த்தி செய்திட வேண்டும்

.கரணை அளவு : 75,000 இரு பரு கரணைகள் எக்டருக்கு

கரும்பு நடவு முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்இயந்திர முறை நடவுதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இயந்திர நடவு கருவி எக்டருக்கு ரூ.3750/- சேமிக்க உதவுகிறது மற்றும் நாள் ஒன்றிற்கு 1.5 எக்டர் பரப்பளவு நடவு செய்கிறது.மனித ஆற்றலைக் குறைக்கிறது மற்றும் விதை அளவு எக்டருக்கு 5 டன்னாக குறைக்கிறது.இணைவரிசை நடவுமுறையில் இரண்டு புறமும் கரணைகளை 150 + 30 செ.மீ இடைவெளியில் அஸ்ட்ராப் 8000 வகை (அறுவடை இயந்திரம்) கொண்டு அறுவடை செய்யுமாறு நட வேண்டும் மற்றும் 150 + 30 செ.மீ இடைவெளியில் நியூ ஹாலண்ட் 4000 வகை அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்யுமாறு ஒரு வரிசையில் நடவு செய்ய வேண்டும்.நிலத்தடி சொட்டு நீர் பாசன முறையில் கரும்பை பயிர் செய்யும்போது சொட்டு நீர் குழாய்களை 20 செ.மீ ஆழத்தில் வாய்க்காலில் பதிக்க வேண்டும் மற்றும் விதை கரணைகளை  சொட்டு நீர் குழாய்க்கு 5 செ.மீ மேல் இருக்குமாறு பதிக்க வேண்டும்.செம்மை கரும்பு சாகுபடியில் 25-35 நாட்கள் வளர்ந்த நாற்றுகளை 5x2 அடி இடைவெளியில் விளைநிலத்தில் நட்டு சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.பரந்த இடைவெளி கரும்பு சாகுபடியில் ஊடுபயிராக தக்கைப் பூண்டு மற்றும் சணப்பை பயிரிடுவதன் மூலம் மண் வளம் மேம்படும் மற்றும் களைகளை கட்டுபடுத்தலாம். இது இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் கரும்பு விளைச்சல் அதிகரிக்கிறது.கடின மண்ணில் வரப்பில் கரணைகளை 80 செ.மீ இடைவெளியில் நடுவதன் மூலம் கரணை அழுகல்நோயை தவிர்க்கலாம் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.நடவு செய்த மூன்று நாட்களுக்குள் வரப்பின் எதிர் திசையில்10 செ.மீ இடைவெளியில் ரைசோபிம் கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை எக்டருக்கு 10 கிலோ அளவு விதைக்க வேண்டும்.அதிக இடைவெளியுள்ள பயிர்களில் நடவு செய்த 50-60 நாட்களில் பசுந்தாளை உழுதுவிட வேண்டும் மற்றும் நடவு செய்த 90-100 வது நாளில் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்துடன் மண் அணைக்க வேண்டும்.சுழல் கலப்பை பொருத்திய எந்திரக் களையெடுக்கும் கருவியை கொண்டு களை எடுக்க வேண்டும் மற்றும் சால் அமைக்கும் கருவி கொண்டு மண் அணைப்பதன் மூலம் ஆட்கள் செலவை சேமிக்கிறது மற்றும் தொழிலாளர் வேலைபளுவைக் குறைக்கிறது.   நான்கு அடி வரிசை. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு வரி நடவு. மண்ணின் வளத்தை அதிகரிக்க ஊடுபயிராக தக்கைப் பூண்டு/ சணப்பை நடவு செய்ய வேண்டும்.  இது மேலும் இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் விளைச்சலை அதிகரிக்கிறது.    கரணைகளை வரப்பின் ஒரு பக்கத்தில் நடவு செய்ய வேண்டும். வரப்பின் எதிர் புறத்தில் 10 செ.மீ உயரம் கொண்ட வரப்பில் ரைசோபியம் விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை 10 கிலோ/ எக்டர் விதைக்க வேண்டும்.நடவு செய்த 50-60 நாட்களுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தை அளிக்க வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து கொண்டு பகுதி மண் அணைத்தல் வேண்டும்.களையெடுக்கும் கருவி கொண்டு களையெடுக்க வேண்டும் மற்றும் மண் அணைத்தல் மூலம் பணியாளர்கள் கூலி செலவைக் குறைக்கிறது மற்றும் மனித வேலைபளுவைக் குறைக்கிறது.

போக்கிடங்களை நிரப்புதல்வயலில் போக்கிடங்கள் இருந்தால் நடவு செய்த 30 நாட்களுக்குள் முளைத்த கரணைகளைக் கொண்டு நடவு செய்திட வேண்டும்இரண்டு பதியம் கரணைகளைக் கொண்டு சந்து நிரப்புதல் வேண்டும்/ 15-20 நாட்களான பாலித்தீன் பை நாற்றுகளை நடவு செய்வதன் மூலம் பயிர் நன்றாக வளரும்.போக்கிடங்களில் நடவு செய்த பிறகு மூன்று வாரங்கள் வரையிலும் வயலில் தேவையான ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது கரணைகள் நன்கு முளைத்து வளர ஏதுவாகும்.

தோகை பரப்புதல்சால்மேடுகளில் காய்ந்த கரும்புத் தோகையை சீராக 10 செ.மீ உயரத்திற்கு நடவு செய்த ஒரு வாரத்திற்குள் பரப்புதல் வேண்டும். இதனால் வறட்சி காலங்களில் கரும்பு தாக்குப்பிடித்து வளர்வதற்கும் கரும்பின் நீர் தேவை குறைவதற்கும், களைச் செடிகளின் ஆதிக்கம் குறைவதற்கும் மற்றும் இளங்குருத்துப் புழுவின் தாக்குதல் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. களிமண் வகைகளில் தோகைபரப்புதலைநடவு செய்த 21 நாட்களுக்குப பிறகு செய்திட வேண்டும். கரையான் தொல்லை அதிகம் உள்ள இடங்களில் தோகை பரப்புதலை செய்யாமல் இருத்தல் நன்று

.ஊடுபயிர் சாகுபடிதண்ணீர் தட்டுப்பாட்டு அற்ற பகுதிகளில் சோயா மொச்சை அல்லது உளுந்து அல்லது பச்சைப்பயறு போன்ற பயிர்களை கரும்பு நடவுசால் மேடுகளின் நடுவில் ஒரு வரிசையில் விதைக்கலாம். கொளுஞ்சி அல்லது சணப்பை ஊடுபயிராக நடவுசால் மேடுகளில் விதைத்த 45ம் நாள் பிடுங்கி கரும்பு வரிசைக்கு அருகே வைத்து மண் அணைப்பதின் மூலமாக மண்ணின் சத்துக்கள் அதிகரிப்பதோடு கரும்பில் அதிக மகசூல் அடையலாம். மேலும் கோ1 என்ற சோயா மொச்சை ஊடுபயிர் செய்வதின் மூலம் கரும்பின் மகசூல் குறையாமல் சோயா மொச்சையிலிருந்து ஒரு எக்டரக்கு 800 கிலோ வரையில் மகசூல் எடுக்கலாம்

களை நிர்வாகம்களை அதிகமாக உள்ள இடத்தில் பயிர் வரிசையில் ஒரு வரி களையெடுக்க வேண்டும் மற்றும் விதைத்த 30,60 மற்றும் 90ம் நாட்களில் மண்வெட்டி கொண்டு வரப்புகளில் களையெடுக்க வேண்டும்.  அட்ராஜின் 2கிலோ தெளிக்கவும் அல்லது எக்டருக்கு 750மிலி ஆக்ஸிப்ளுர்ஃபென் 600 லிட்டர் தண்ணீரில் கலந்து முளைக்குமுன் களைக்கொல்லியாக நடவு செய்த 3ம் நாளில் விசிறி வடிவ குழாய் கொண்ட நேப்சாக் தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.விதைத்த 3-ம் நாள் களை முளைப்பதற்கு முன் அட்ராஜின் எக்டருக்கு 1.0 கிலோ அளிக்கவும். தொடர்ந்து விதைத்த 45-ம் நாள் களை முளைத்தபின் கிளைபோசேட் எக்டருக்கு 1.0 லிட்டர் அளிக்கவும். விதைத்த 90-ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும். களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லி தெளிக்கப்படவில்லையெனில், களை முளைத்த பின் விதைத்த 21-ம் நாளில் கிராமசோன் லிட்டர் + 2,4-D சோடியம் உப்பு எக்டருக்கு 2.5 கிலோ 600 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.ஒட்டுண்ணிக் களைகள் பிரச்சனை இருப்பின் களை முளைத்த பின் 2,4-D சோடியம் உப்பு எக்டருக்கு ஒரு கிலோ 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். அருகில் பருத்தி அல்லது வெண்டை செடி இருந்தால் 2,4-D தெளிப்பதை தவிர்க்கவும். 20% யூரியாவை நேரடியாக அளிப்பதன் மூலம் சுடு மல்லியை கட்டுப்படுத்தலாம்.நடவுக்கு முன்னர் தெளிப்பாக விதைப்பதற்கு 21 நாட்கள் முன்னர் கிளைபோசேட் 2.0 கிலோவை அமோனியம் சல்பேட் 2% கலந்து அளிக்க வேண்டும்.தொடர்ந்து களை முளைத்த பின்ளர் கிளைபோசேட் 2.0 கிலோவை அமோனியம் சல்பேட் 2% கலந்து விதைத்த 30-ம் நாள் அளிக்க வேண்டும். இதன் மூலம் கோரைபுற்களை கட்டுப்படுத்தலாம். களை இல்லாத சூழலை உருவாக்கலாம்.களைக் கொல்லிகள் வேலை செய்யாவிட்டால் சிறிய மண்வெட்டி கொண்டு வரப்புகளில் நடவு செய்த 25, 55 மற்றும் 85-ம் நாளில் களையெடுக்க வேண்டும். வாய்க்காலில் கைக்கொத்து கொண்டு களைகளை நீக்க வேண்டும்.களை முளைத்த பின் நேரடி தெளிப்பாக ஃபெர்னோசோன் (2, 4 –D சோடியம் உப்பு) 2கிராம் + 10 கிராம் யூரியா ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து படர் கொடி களைகளை அழிக்க தெளிக்கலாம்.

மேலுரமிடுதல்மண்ணில் இடுதல்தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடங்களில் 275 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவில் மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90ம் நாள் இடுதல் வேண்டும்கிணற்றுப் பாசனமுடைய பகுதிகளில் 225 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவில் மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90ம் நாள் இடுதல் வேண்டும்கிணற்றுப் பாசனமுடைய பகுதிகளில் 225 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவினை மூன்று சம பாகங்களாகப் பிரித்து நடவு செய்த 30, 60 மற்றும் 90வது நாட்களில் இடுதல் வேண்டும். தழைச்சத்து சேமிப்புவேப்பம்புண்ணாக்கு கலந்த யூரியா67.5 கிலோ தழைச்சத்து/ எக் ரூ.27.5 கிலோ வேப்பம்புண்ணாக்கினை நடவு செய்த 30, 60 மற்றும் 90 நாட்களில் இட வேண்டும்குறிப்பு: வேப்பம்புண்ணாக்கு கலத்தல் தேவையான அளவு வேப்பம்புண்ணாக்கினைப் பொடி செய்து அதனை யூரியா உரத்துடன் நன்கு கலந்து 24 மணி நேரத்திற்கு வைத்து பின்னர் உபயோகிக்கலாம். இதன் மூலம் 75 கி தழைச்சத்து/எக் மிச்சமாகிறது.அசோஸ்பைரில்லம்12 பொட்டலம் (2400 கிராம்/ எக்) அசோஸ்பைரில்லம் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நுண்ணுயிர் கலவை எண் 1 உடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து நடவு செய்த 30வது நாள் கரும்புப் பயிர் குத்துக்களுக்கு அருகே இட வேண்டும். இதே போல் கரும்பு நட்ட 60வது மற்றும் 90வது நாட்களில் இதே அளவில் இடுதல் வேண்டும். (கிணற்று நீர்ப்பாசனமுடைய இடங்களுக்கு)தொடராக இடுதல்கரும்புப் பயிர் வரிசைக்கு பக்கவாட்டில் களைக் கொத்தி கொண்டு சுமார் 5 செ.மீ. ஆழசால் அமைத்து அதில் உரங்களை தொடராக இட்டு பின்னர் மண் கொண்டு மூட வேண்டும்.ஆழ்துளை முறையில் இடுதல்255 கிலோ தழைச்சத்தினை யூரியா மற்றும் பொட்டாஷ் சேர்த்து15 செ.மீ. ஆழத்தில் கரும்புப் பயிரின் ஒவ்வொரு குத்துக்கு அருகே இடுவதன் மூலம் 20 கிலோ தழைச்சத்தினை கரும்பின் மகசூல் பாதிக்காத வகையில் சேமிக்கலாம்நுண்ணூட்டச்சத்து உரங்கள்:(a) துத்தநாக பற்றாக்குறையுள்ள மண்: அடியுரமாக எக்டருக்கு 37.5 கிலோ துத்தநாக சல்பேட்       அளிக்கவும்.(b) கரும்பில் துத்தநாக பற்றாக்குறை அறிகுறிகள்: இலைத் தெளிப்பாக 0.5% துத்தநாக சல்பேட்டை 1% யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும். (a) இரும்பு பற்றாக்குறையுள்ள மண்: அடியுரமாக எக்டருக்கு 100 கிலோ ஃபொரோஸ் சலடபேட் அளிக்கவும்.(b) கரும்பில் இரும்பு பற்றாக்குறை அறிகுறிகள்: இலைத் தெளிப்பாக 1% ஃபொரோஸ் சலடபேட்டை  1% யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும்.தாமிர பற்றாக்குறையுள்ள மண்ணில் தாமிர சல்பேட்டை எக்டருக்கு 5 கிலோ மண் வழியாக அளிக்க வேண்டும். மாற்றாக இலைத் தெளிப்பாக 0.2% தாமிர சல்பேட்டை இரண்டு முறை பயிர் வளர்ச்சியின் ஆரம்பத்தில் அளிக்க வேண்டும்.பொதுவான நுண்ணூட்டச்சத்து கலவை: கரும்பிற்கு எக்டருக்கு 50 கிலோ நுண்ணூட்டச்சத்துக் கலவையை அளிக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்துக் கலவை 20 கிலோ ஃபெரோஸ் சல்பேட், 10 கிலோ மாங்கனீசு சல்பேட், 10 கிலோ துத்தநாக சல்பேட், 100 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்த 5 கிலோ போரக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை நடவிற்கு முன்னர் மண்ணில் அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.(அல்லது) கரும்பின் மகசூலை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணூட்டக் கலவையை எக்டருக்கு 50 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கலாம்.நுண்ணூட்டச்சத்து மற்றும் பேரூட்டச்சத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு

பேரூட்டச்சத்து

கரும்பு – நடவு பயிர் (சர்க்கரை ஆலைக்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு) எக்டருக்கு 300:100:200 கிலோ தழைச்சத்து , மணிச்சத்து and சாம்பல் சத்து இட வேண்டும்.கரும்பு – மறுதாம்பு பயிர் (சர்க்கரை ஆலைக்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு) எக்டருக்கு 300 + 25% அதிக தழைச்சத்து : 100 : 200 kg  மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும்.வெல்லத்திற்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு (நடவு மற்றும் மறுதாம்பு பயிர்) எக்டருக்கு 225 : 62.5 : 112.5 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துகரும்பிற்கான உயிர் உரம்அசோஸ்பைரில்லம் என்பது கரும்பு வேர்களுக்கு ஊட்டமளிக்கும் பொதுவான தழைச்சத்தாகும் மற்றும் வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு 50 முதல் 75 கிலோ வளிமண்டல தழைச்சத்தை நிவர்த்தி செய்கிறது. தற்சமயம் பயிரில் வாழும் பாக்டீரியம் (குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்) கரும்பில் அசோஸ்பைரில்லமை விட அதிகமாக தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. இவை கரும்பு பயிர் முழுவதிற்கும் தழைச்சத்தை எடுத்துச் செல்கிறது மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகரிக்கிறது.  மண்ணில் பாஸ்பேட், இரும்பு மற்றும் துத்தநாக சத்தை வேர் வரை கொண்டு செல்கிறது. இது பயிர் வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் கரும்பின் மகசூலையும் சாறில் இனிப்புத் தன்மையையும் அதிகரிக்கிறது. இது அசோஸ்பைரில்லத்தைவிட அதிக செயல்திறன் வாய்ந்தது.    த.வே.ப.கழக பயோபெர்ட் -1 பாஸ்போபாக்டீரியாவை பாஸ்பரஸ் கரைப்பானாக கரும்பு பயிருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்  கொண்டு கரணை நேர்த்தி செய்தல்கரணைகளை நடுவதற்கு முன் எக்டருக்கு 10 பாக்கெட் (2 கிலோ)குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும்.  குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்  கொண்டு அடியுரமிடுதல் எக்டருக்கு 12 பாக்கெட் (2.4 கிலோ) விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும்.அதே முறையில் பாஸ்போ பாக்டீரியா அளித்தல்அடியுரம் இடாவிட்டால் அதே முறையில் விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும்.நுண்ணுயிர் நேர்த்தி நடவிற்கு சற்று முன்பு அளிக்க வேண்டும். நுண்ணுயிர் உரம் அளித்தவுடன் நடவு செய்து நீர்ப்பாய்ச்ச வேண்டும்.நுண்ணுயிர் உரத்தை இரசாயன உரத்துடன் கலக்க வேண்டாம்.பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை 25% குறைப்பதன் மூலம் நுண்ணுயிர் உரம் அளித்ததன் பலனை அடையலாம்.13.நீர் நிர்வாகம்கரும்புப் பயிருக்கு அதன் வளர்ச்சிப் பருவங்களுக்கு ஏற்ப நீர் பாய்ச்சுதல் வேண்டும்முளைப்புப் பருவம் (0-35 நாட்கள்)கரும்புப் பயிருக்கு அதன் முளைப்புப் பருவத்தில் குறைந்தபட்சமாக 2 முதல் 3 செ.மீ. ஆழத்திற்கு குறுகிய இடைவெளியில் நீர் பாய்ச்சுதல் மணல்சாரி இடங்களில் கரும்பின் முளைப்புத் திறனை மேம்படுத்தும். தெளிப்பு நீர்ப்பாசனம் பயிரின் முளைப்பு கால வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்றதாகும். பின்னர் கிளைப்பு, வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் முறையே 0.75, 0.75 மற்றும் 0.50 பாசன நீர் மொத்த ஆவியாகுதல் (IW/CPE) விகிதத்தில் நீர் பாய்ச்சிட வேண்டும்பருவம்நீர்ப்பாசன இடைவெளிமணல் நிலம்களிமண்கிளைப்புப் பருவம் (36 முதல் 100 நாட்கள்)810வளர்ச்சிப் பருவம் (101 முதல் 270 நாட்கள்810முதிர்ச்சி பருவம் (271 நாட்கள் முதல் அறுவடை வரை)   1014சொட்டு நீர்ப்பாசனம்6 முதல் 7 மாத கரும்பு நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்யப்பட்ட விதைக்கரணைகளை 30 × 30 × 30 / 150 செ.மீ என்ற இடைவெளியில் இரு வரிசை பாரில் நடவு செய்யவும்ஒரு வரிசையில் மீட்டர் ஒன்றிற்கு எட்டு கரணைகளை வரப்பின் இரண்டு பக்கத்திலும் நடுவதன் மூலம் வாய்க்கால் நடவு முறையை அமைக்கலாம்.12 மிமீ அகல சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு குழாய்களை நடவு சால்மேட்டின் மத்தியில் இருபக்கவாட்டு குழாய்களுக்கான இடைவெளி 240 செ.மீ. இருக்கும் விதத்தில் அமைக்க வேண்டும். இந்த பக்கவாட்டு  குழாய்களிலிருந்து 75 செ.மீ. இடைவெளியில் ஒரு மணி நேரத்திற்கு 8 லிட்டர் பாசன சொட்டு நீர் வெளியாகும் விதமாக வடிவமைக்க வேண்டும். பக்கவாட்டு குழாய்களின் நீளம் 30 லிருந்து 40 மீட்டர்க்கு மேல் போகாமல் இருக்க வேண்டும்62.5 கி/ எக் என்ற அளவில் மணிச்சத்தினை அடியுரமாக நடவிற்கு முன்னர்இடவேண்டும்தழை மற்றும் சாம்பல் சத்தினை முறையே 275 1125 கி/ எக். என்ற அளவில் சொட்டு நீர்க் குழாய்களின் வழியே ’வென்ட்சூரி’ உபகரணம் கொண்டு 10 முதல் 12 பகுதியாக நடவு செய்த 15 முதல் 180 நாட்கள் வரை கொடுக்க வேண்டும்குறைந்த மற்றும் மிதமான ஊட்டச்சத்து வயல்களில் 50 சத தழை மற்றும் சாம்பல் சத்துக்களை அதிக அளவில் இட வேண்டும்தண்ணீரானது மண் மற்றும் பயிரிலிருந்து ஆவியாக வெளியேறுதலைப் பொருத்து கரும்பிற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை சொட்டு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும் நிலத்தடியில் 120+40 செ.மீ பக்கவாட்டு இடைவெளியில் கரும்பை இரண்டு புறமும் நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர் பாசன உரமிடுதல் மகசூலை அதிகரிக்கும்பரிந்துரைக்கப்பட்ட 125 % தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை (275:63:112..5 கிலோ/எக்டர்) குழி வழி முறை உரப்பாசனம் அளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.

எதிர்பாராசூழ்நிலைக்கேற்ற நிவாரணத் திட்டம்இடர்பாடான சூழ்நிலைகளில் படிப்படியாக சால்களை அகலப்படுத்துதல்நடவு சமயத்தில் 30 செ.மீ. அகலத்தில் நீர்ப்பாசனம் வாய்க்கால் அமைத்து பின்னர் அதனை 45 செ.மீ. அளவிற்கு நடவு செய்த 45ம் நாள் முதல் மண் அணைக்கும்போது அகலப்படுத்தி மேலும் 90ம் நாள் மேற்கொள்ளும் ஆழப்படுத்துவதின் மூலம் 35 சதவிகிதத் தண்ணீரினைச் சேமிக்கலாம்வறட்சி நிர்வாகம்கரும்பு விதைக்கரணைகளை 80 கிலோ நீர்த்த சுண்ணாம்புடன் 400 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் 1மணி நேரம் ஊறவைத்தல்30 செ.மீ. ஆழமான நடவு சால்களில் கரணைகளை நடவு செய்தல்பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சத சரைசலை வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்தல்6 சத கயோலின் (60 கிராம் கயோலின் 1 லிட்டர் தண்ணீருக்கு) தெளித்து நீர்த்தேவையினைக் குறைத்தல்தண்ணீர் தட்டுப்பாடான பகுதியில் மாறுசால் அல்லது விடுசால் பாசனம் நன்மைக்குறியதாகும்நடவு செய்த 120ம் நாள் கூடுதலாக 125 கி பொட்டாஷ்/ எக் என்ற அளவில் இட வேண்டும்கடைசி உழவின் பொழுது தென்னை நார்க்கழிவு 25 டன்/ எக் என்ற அளவில் இடுதல்காய்ந்த சோகைகளை 5வது மாதம் உரித்து கரும்பு வரிசைக்கு இடையே பரப்புதல்வறட்சி மேலாண்மைநீர் பற்றாக்குறையை சரிகட்ட எத்தரல் 200 பி.பி.எம். அல்லது சுண்ணாம்புக் கரைசல் (80 கிலோ சுண்ணாம்பை 400 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) போன்றவற்றில் விதைக்க கரணைகளை ஒரு மணி நேரம் நனைத்து வைத்திருந்த 30 செ.மீ. ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். பின்பு நீர் பற்றாக்குறை காலங்களில்  பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சதவிகித கரைசல் ஒவ்வொன்றையும் 15 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) கரைசலை தெளிப்புச் செய்ய வேண்டும். நீர்ப்பற்றாக்குறையான சூழ்நிலைகளில் மாற்று சால் மற்றும் சால் விட்டு சால் பாசன முறைகளைக் கையாளுவது நன்மை பயப்பனவாக அமைகிறது.14. அறுவடை முன் நேர்த்திகள்அ.கரும்பு முதிர்ச்சி ஊக்கி தெளித்தல்சோடியம் மெட்டா சிலிகேட் 4 கிலோ / எக் என்ற அளவில் 750 லிட்டர் தண்ணீர் கலந்து கரும்பு நடவு செய்த 6ம் மாதம் தெளிக்க வேண்டும். பின்னர் அதே இரசாயனத்தை 8 மற்றும் 10வது மாதத்தில் இருமுறை தெளிப்பதன் மூலம் கரும்பு மகசூல் மற்றும் சர்க்கரை கட்டுமானத்தை அதிகரிக்கலாம்.ஆ.கரும்பின் முதிர்ச்சி அறிதல்கரும்பின் முதிர்ச்சியை பிரிக்ஸ் மீட்டர் என்ற கருவியின் மூலம் அறியலாம். 18 முதல் 20 சத பிரிக்ஸ் அளவு கரும்பின் முதிர்ச்சியை குறிக்கும். கரும்பின் நுனி மற்றும் கீழ் பகுதி பிரிக்ஸ் அளவு 11 விகித அளவில் இருத்தல் வேண்டும்.15. அறுவடைமுன்பட்ட கரும்பு இரகங்களை 10 முதல் 11 மாதத்திற்குள்ளும் பின்பட்ட இரகங்களை 11 முதல் 12 மாதத்திற்குள்ளும் அறுவடை செய்ய வேண்டும்கரும்பினை அதன் உச்ச கட்ட முதிர்ச்சி காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யும்போது நடவுப் பயிராக இருந்தாலும் அல்லது மறுதாம்புப் பயிராக இருந்தாலும் தரையோடு தரையாக பூமி மட்டத்திற்கு அறுவடை செய்ய வேண்டும்மறுதாம்பு பயிர்1.நடவு கரும்பின் அறுவடைக்கு பின் செய்ய வேண்டியவைகரும்பு அறுவடைக்குப் பின் கீழ்க்கண்ட செய் நேர்த்திகளை 10 நாட்களுக்குள் முடிப்பதன் மூலமாக கட்டை கரும்பின் துளிர்ப்பு மற்றும் வளர்ச்சி சீராக அமையும் கரும்பு தோகைகளை வயலில் இருந்து வெளியே எடுத்துவிட வேண்டும்.தோகைகளை எரித்தல் கூடாது.மண் நிறைக்க நீர்ப்பாசனம் செய்யவும் நல்ல ஈரப்பதத்தில் கூரிய மண்வெட்டி கொண்டு மண் மட்டத்திற்கு கீழ் 4-6 செ.மீ. அளவிற்கு கரும்பு கட்டையை சீவ வேண்டும். கூப்பர் கலப்பை கொண்டு கரும்பு பயிரின் இரு கரைகளையும் உடைத்துவிட வேண்டும். கட்டைக் கரும்பின் போக்கிடங்களை கட்டை சீவிய 30 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும். இதற்கு அதே நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட கரும்பு குத்துக்களை பிரித்து நடவு செய்யலாம். அல்லது பாலித்தீன் பை நாற்றுகளைக் கொண்டும் போக்கிடங்களை நிரப்பலாம். நடவு பயிருக்கு பரிந்துரை செய்யப்படும் அதே அளவில் அங்கக உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை இடுதல் வேண்டும்மறுதாம்புப் பயிர் நிர்வாகம்ஐஐ.பயிர் நிர்வாகம்25 சத அதிகப்படியான தழைச்சத்தினை கட்டைவிட்ட 5-7 நாட்களில் அளித்தல்பயிர் இரும்புசத்து பற்றாக்குறையால் மஞ்சளாக மாறும் போது அன்னபேதி உப்பினை 2.5 கி/எக் என்ற அளவில் கட்டைவிட்ட 15ம் நாள் தெளித்தல் பயிர் மீண்டும் மஞ்சளாக இருந்தால்15 நாள் இடைவெளியில் திரும்பவும் தெளிக்க வேண்டும். கடைசி தெளிப்பபுடன் எக்டருக்கு 2.5 கிலோ யூரியாவையும் சேர்த்துக்கொள்ளலாம்கட்டைவிட்ட 20வது 40வது மற்றும் 60வது நாளில் களையெடுத்தல்முதல் மேலுரத்தினை 25ம்நாளும், 2வது மேலுரத்தினை 45 முதல் 50 நாட்களுக்குள் இடுதல்இறுதி மேலுரத்தினை 70-75 நாட்களுக்குள் இட வேண்டும்கட்டைவிட்ட 50 வது நாளில் பகுதி மண் அணைத்தல்90வது நாள் கடைசி மண் அணைத்தல்120வது மற்றும் 180வது நாள் தோகை உரித்தல்180 வது நாள் விட்டம் கட்டுதல்11 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்தல்ஊ. கரும்பு விதை (நாற்றங்கால் பயிர்)கரும்பு நடவு பயிர் பயிரிடுவதற்கு 6 முதல் 7 மாதத்திற்கு முன்னர் கரும்பு விதை நாற்றங்கால் நடவு செய்ய வேண்டும்.

விதை நாற்றங்கால் சாகுபடியில் கவனிக்க வேண்டியவைதோகை உரித்தல் கூடாதுவிட்டம் கட்டுதல் கூடாது6 முதல் 7 மாதத்தில் அறுவடைகரணை தயார் செய்யும் பொழுது காய்ந்த சோகைகளை கைகளால் நீக்க வேண்டும்பரு அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்விதைக்கரும்பினை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றால் முழு கரும்பாகவும் தோகை நீக்காமலும் இருக்க வேண்டும்50 கிலோ யூரியாவை மேலுரமாக விதை கரும்பு அறுவடைக்கு ஒரு மாதம் முன்னர் இடுதல் அவசியம்நோய், பூச்சிதாக்குதல் இன்றி பராமரிக்க வேண்டும்பயிர் வினையியல்எக்டருக்கு 1.0, 1.5 மற்றும் 2 கிலோ த,வே.ப.கழக கரும்பு பூஸ்டரை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து விதைத்த 45, 60 மற்றும் 75-ம் நாள் அளிப்பதன் மூலம் கரும்பின் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்கலாம். கணுவின் நீளம், கரும்பு மகசூல் மற்றும் இனிப்புத் தன்மையை அதிகரிக்கிறது மற்றும் வறட்சியை தாங்கும் தன்மையை அளிக்கிறது.

புதினா

நறுமணப் பர்கள் ::

புதினாஇரகங்கள்ஜப்பான் புதினா     -     எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி – 41911ஸ்பியர்                  -     எம்எஸ்எஸ்-1,5, பஞ்சாப் ஸ்பியர் மின்ட் -1பெர்கோ            -     சிரன்மிளகு              -     குக்ரைல்மண் மற்றும்  தட்பவெப்பநிலைவடிகால் வசதியுடைய இருபொறை மண், காரத்தன்மையுடைய மற்றும் அங்க்கச் சத்த நிறைந்த மண்வகைகள் அனைத்தும் சாகுபடிக்கு உகந்தவை. மிதவெப்ப மண்டலங்களில் சராசரி ஆண்டு மழையளவு 100-150 செ.மீ இருத்தல்வேண்டும். விதை மற்றும் விதைப்புவேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் புதினா இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது

.நிலம் தயாரித்தல்நிலத்தை உழுது நன்கு பண்படுத்தவேண்டும்.

பின் எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இட்டு தேவையான அளவில் பாத்திகள் அமைக்கவேண்டும்.

பின் வேர் விட்ட தண்டுக்குச்சிகளை 40 x 40 செ.மீ இடைவெளியில் ஜ¤ன் - ஜ¤லை மாதங்களில் நடவு செய்யவேண்டும்

.ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைஅடியுரம் : ஒரு எக்டருக்கு 30,60,10 கிலோ தழை, மணி மற்றும்  சாம்பல் சத்து இடவேண்டும்

.மேலுரம் : நடவு  செய்த 60 மற்றும் 120வது நாளில் ஒரு எக்டருக்கு 30 கிலே தழைச்சத்து உரத்தை இரண்டு முறை  பிரித்து இடவேண்டும்.நீர் நிர்வாகம்பின்செய்நேர்த்திதேவைக்கேற்ப கைக்களை எடுத்து களைகளை கட்டுப்படுத்தவேண்டும்.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புபொதுவாக புதியானவை பெருமளவில் பூச்சி மற்றும் நோய் தாக்குவதில்லை.அறுவடைநடவுசெய்த 5வது மாதத்தில் முதல் அறுயடையும் அதன் பினான்ர் மூன்று மாத இடைவெளியிலும் அறுவடை செய்யவேண்டும். நல்ல முறையில் பராமரிப்பு செய்தால் நான்கு ஆண்டுகள் வரை லாபகலமான மகசூல் எடுக்கலாம்.மகசூல்இலைப்பாகம் -

 ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 15 - 20 டன்எண்ணை - ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 50 - 100 டன்
கீரை வகைகள்

இரகங்கள்கோ

 1 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை)
கோ 2 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை)
கோ 3 (கிள்ளுக்கீரை மற்றும் அரைக்கீரை
)கோ 4 (தானயக் கீரை)
கோ 5 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை

)மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இரு மண் பாட்டு நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது. அதிகக் களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்கவேண்டும். உப்பு நீர் விதை முளைப்புத் திறனைப் பாதிப்பதால் முளைக்கும் வரை நல்ல நீரும் பின் செடி வளர்ந்த பின் ஓரளவு உப்பு நீரும் உபயோகிக்கலாம்.கீரை வகைகள் அதிக சூரிய ஒளியில் அதிக விளைச்சல் தரவல்லது. 25-30 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையில் நன்கு வளரும். தானியக்கீரை வெப்ப மண்டலத்திலும் குளிர் மண்டலத்திலும் பயிரிட ஏற்றது.

பருவம் : ஆண்டு முழுவதும் பயிர்  செய்யலாம்.நிலம் தயாரித்தல்நிலத்தை மூன்று முறை நன்கு எக்டருக்கு 25 டன்கள் நன்கு மக்கிய தொழு எருவை கடைசி உழவின் போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். பின் 2 x 1.5 மீ என்ற அளவில் சமபாத்திகளும் பக்கத்தில் நீர்ப்பாசனத்திற்கு வாய்க்கால்களும் அமைக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைஉரமிடுதல் :
 எக்டருக்கு அடியுரமாக தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல் சத்து 25 கிலோ கொடுக்கக்கூடிய அராசயன உரங்களை அளிக்கவேண்டும்.பயிர் இடவேண்டிய சத்துக்கள்(கிலோவில்)இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)  தழைமணிசாம்பல்10:26:26யூரியாசூப்பர் பாஸ்பேட்கீரை வகைகள்அடியுரம்75502597142157

விதையும் விதைப்பும்விதையளவு : எக்டருக்கு 2.5 கிலோவிதைத்தல் : விதைகள் மிகவம் சிறியவையாக இருப்பதால் சீராக விதைக்க விதையுடன் 2 கிலோ மணல் கலந்து பாத்திகளில் நேரடியாகத் தூவவேண்டும். பின் விதைகளின் மேல் மண் அல்லது மணலை மெல்லிய போர்வை போல் தூவி மூடிவிடவேண்டும்.

நீர் நிர்வாகம்நீர்ப்பாய்ச்சுதல் : விதைத்தவுடன் பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்சவேண்டும். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்கும். பின்னர் விதைத்த 3ம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். விதைத்த 6-8 நாட்களில் விதைகள் முளைத்துவிடும். பிறகு 12-15 செ.மீ இடைவெளியில் செடிகளை கலைத்து விடவும்.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புவிதைத்த 21 நாட்களில் இருந்தே அறுவடை செய்யப்படுவதால் மருந்துகள் தெளிக்காமல் இருப்பது நல்லது. எனினும் இலை கடிக்கும் புழுக்களை கட்டுப்படுத்த கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.ஒரு எக்டருக்கு லிண்டேன் தூவும் மருந்து 1.3 சதம் மருந்தை 10 கிலோ என்ற அளவில் பாத்திகளைச் சுற்றி தூவி, எறும்புகள், கரையான்கள் மற்றும் மற்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடைஅரைக்கீரை : விதைத்த 25 நாட்களில் தரையிலிருந்து 5 செ.மீ அளவில் கிள்ளி எடுக்கவேண்டும். பின் 7 நாட்கள் இடைவெளியில் 10 முறை அறுவடை  செய்யலாம். எக்டருக்கு மகசூல் 30 டன்கள்

.முளைக்கீரை : விதைத்த 21-25 நாட்களில் வேருடன் பறிக்கவேண்டும். சிறிய செடிகளை 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 10 டன்கள்

.தண்டுக்கீரை : விதைத்த 35-40 நாட்களில் வேருடன் அல்லது கிளைகளை மட்டும் அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 16 டன்கள்.

தானியக்கீரை : விதைத்த 25 நாட்களில் பசுங்கீரை எக்டருக்கு 8 டன்கள், விதைத்த 90-100 நாட்களில் அறுவடை செய்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். தானியம் எக்டருக்கு 2.4 டன்கள்.
பீர்க்கன்


வகைகள் :கோ 1, கோ 2, பி.கே.எம் 1

.மண்:அங்ககத் தன்மைக் கொண்ட வடிகால் வசதியுடைய மணல் கொண்ட களிமண் ஏற்றது. கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரையிலுள்ள மண் ஏற்றது

.பருவம்:நாற்று ஜ%லை மற்றும் ஜனவரி மாதங்களில் படர்கிறது

விதை அளவு:எக்டருக்கு 1.5 கிகி

விதை தேவைப்படுகிறதுவிதை நேர்த்தி:டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 10 கி/கிகி விதைகள் கொண்டு விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்ய வேண்டும்

.நிலத்தை தயார் செய்தல்:நிலத்தை நன்கு உழ வேண்டும். 30 செ.மீ x 30 செ.மீ x 30 செ.மீ அளவு 2.5 x 2 மீ இடைவெளி விட்டு குழிகள் எடுக்க வேண்டும்

.விதைத்தல்:குழிக்கு 5 விதை என்ற அளவில் விதைக்க வேண்டும் மற்றும் 15 நாட்களுக்குப் பிறகு குழிக்கு இரண்டு நாற்றுகளை வைக்கவும்.

பாசனம்:விதை ஊன்றுவதற்கு முன் குழிகளில் நீர் விட வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது.

உரமிடுதல்:10 கிகி தொழுவுரம் அளிக்கவும். 100 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 6:12:12 என்ற கலவையில் அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் அளிக்க வேண்டும் மற்றும் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு குழிக்கு 10 கிராம் என்ற அளவில் அளிக்கவும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா எக்டருக்கு 2 கிகி, சூடோமோனாஸ் எக்டருக்கு 2.5 கிகி இதனுடன் 50 கிகி தொழுவுரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு 100 கிராம் உழுவதற்கு முன் அளிக்க வேண்டும்.

சொட்டு நீர் பாசனம்:சொட்டு நீர் பாசனம் அமைக்க முக்கிய மற்றும் கிளை குழாய்கள் அமைக்கவும் மற்றும் 1.5 மீ இடைவெளியில் பக்கவாட்டு குழாய்கள் அமைக்கவும். பக்கவாட்டு சொட்டு நீர் குழாய்களை 60 செ.மீ மற்றும் 50 செ.மீ இடைவெளி விட்டு முறையே மணிக்கு 4 மற்றும் 3.5 லிட்டர் திறன் கொண்ட குழாய்களைப் பதிக்க வேண்டும்.

விதைத்தல்:45 x 45 x 45 செ.மீ அளவில் 2 மீ இடைவெளி மற்றும் 1.5 மீ வரிசை இடைவெளியில் குழிகள் தோண்ட வேண்டும். குழிக்கு மூன்று விதை என்ற அளவில் விதைக்க வேண்டும். முளைவந்த பிறகு ஆரோக்கியமான இரண்டு நாற்றுகளை விட்டு மற்ற நாற்றுகளை அகற்ற வேண்டும். நேரடி விதைப்பிற்கு பதிலாக, விதைகள் பாலீத்தின் பைகளில் விதைக்கபட்டு ஒரு பைக்கு 2 விதைகள் என்ற அளவில் விதைக்கவும் மற்றும் முளைவந்த 15 நாட்களுக்குப் பிறகு, குழிக்கு 2 நாற்றுகள் நட வேண்டும்.

உரப்பாசனம்:எக்டருக்கு 250:100:100 கிகி என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை பயிர் காலம் முழுவதும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

பின்செய் நேர்த்தி:களையைக் கட்டுப்படுத்த மண்வெட்டி கொண்டு மூன்று முறை களையெடுக்க வேண்டும். 2 மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை அடைய தாவரத்திற்கு தாங்கிகளை அமைக்க வேண்டும். விதைத்த 15 நாட்களுக்குப் பிறகு எத்தரால் 250 பி.பி.எம் (2.5 மிலி /10 லி நீர்) வார இடைவெளியில் நான்கு முறை அளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:நோய்கள்:வண்டுகள், பழ ஈக்கள் மற்றும் புழுக்கள:   டைக்ளோர்வோஸ் 76% ஈ.சி 6.5 மிலி/10லி அல்லது டிரைகுளோரோபன் 50% ஈ.சி 1.0 மிலி/லி தெளிக்கவும்.லின்டேன் 1.3 சதவிகிதம் தூள், தாமிரம் மற்றும் கந்தகத் தூள் ஆகியவை தாவர நச்சுத்தன்மை கொண்டவை.

நோய்கள்:சாம்பல் நோய்:டைனோகேப் 1 மிலி/லி அல்லது கார்பன்டாசிம் 0.5 கி /லி தெளிப்பதன் மூலம் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.அடிச்சாம்பல் நோய்:மேன்கோசெப் அல்லது குளோரோதாலோனில் 2 கி/லி 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும்.

மகசூல்:சராசரி மகசூல் எக்டருக்கு 14 -15 டன் ஆகும்.

Thursday, 1 January 2015

இயற்கை உரமான பஞ்சகாவ்யா செய்வது எப்படி?

பஞ்சகாவ்யா பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி கொடுப்பது மட்டும் இல்லாமல் பூச்சிகளில் இருந்து காப்பற்றவும் செய்கிறது. இதை எப்படி உங்கள் வீட்டிலேயே செய்வது?முதலில், கோசானம் 7 kg, கோநெய் 1 kg இரண்டையும் ஒரு பிளாஸ்டிக் பாத்ரம், concrete டான்க் அல்லது மண் பானையில் கலக்கவும். இந்த கரைசலை நன்றாக காலையிலும், மாலையிலும் கலக்கவும். மூன்று நாட்கள் ஆன பின், கோமூத்திரம் 10 லிட்டர், நீர் 10 லிட்டர் சேர்க்கவும். இந்த கரைசலை 15 நாட்கள் வைத்திருக்கவும். நன்றாக காலையிலும், மாலையிலும் கலக்கவும். 15 நாட்கள் ஆன பின், பசும்பால் 3 லிட்டர், பசும்தயிர் 2 லிட்டர், இளநீர் 3 லிட்டர், வெல்லம் 3 கிலோ, பழுத்த பூவன் பழம் ஒரு டஜன் போட்டு கலக்கவும்.இந்த கரைசல், 30 நாட்களுக்கு பின்னர் பஞ்சகாவ்யா ரெடி ஆகி விடும. ஆகா, பஞ்சகாவ்யா செய்ய, கிட்ட தட்டஒரு மாதம் வேண்டும்.சில டிப்ஸ்:- தினமும், காலை, மாலை இரு முறை கரைசலை நன்றாக கலக்க வேண்டும்- அகண்ட வாய் உள்ள பாத்ரம் இருந்தால் நல்லது- பாத்தரத்தை நிழலில் வையுங்கள்.- பத்திரத்தின் வாயை ஒரு கொசு வலை வைத்து கட்டவும். கொசு, மற்ற பூசிகள் உள்ளே போகாமல் இருக்க உதவும்.பஞ்சகாவ்யா பற்றி உயிரியல் ஆய்வில் தெரியும் உண்மைகள்….பஞ்சகாவ்யா மூலம் பயிரின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கிறது என்று அறிவியல் பூர்வமாக நிருபித்து உள்ளார்கள் மதுரையில் உள்ள தியாகராஜர் கல்லூரியில் உள்ள உயிர்தொழில் நுட்பவியல் துறையை சேர்ந்த சந்தான மகாலிங்கம், சுரேஷ் குமார், ராஜன் பாபு என்ற மூன்று மாணவர்கள். இடுகை பொருட்கள் மூலமே விவசாயிகள் தற்சார்பை அடைய முடியும் என்கிறார்கள்.“பஞ்சகவ்யாவில் உள்ள பக்டீரியா பிரித்து எடுத்து வளர்ப்பு ஊடகத்தில் வளர்த்து நீரில் கலந்து தாவரங்களுக்கு கொடுத்து வளர்ச்சியை பார்த்தோம்.இவ்வாறு பிரித்து எடுக்க பட்ட பக்டீரியா அடங்கிய கரைசல் ஊற்றி வளர்த்த தண்டு கீரை வழக்கமான முறையில் வளர்க்க பட்ட தன்டுகீரையை விட அதிக வளர்ச்சியுடனும் அடர்த்தியாகவும் இருந்தது. பஞ்சகவ்யில் உள்ள நுண் இயிரிகள் ஒவ்வொரு 20 நிமிடதிற்கும் பெருகும். இவற்றின் மூலம் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் பயிர்களின் கிளை பகுதிகள், மொட்டு, நுனி, அடிபாகம் வேர் பகுதி ஆகியவற்றின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன” என்கிறார் சந்தான மகாலிங்கம்“பசு மாட்டின் இரைப்பையில் பலவகையான நுண் இயிரிகள் உள்ளன. அவை அதிகமாக பெருகி சாணத்தில் வெளியேறுகின்றன. அப்படி பட்ட சாணத்தில் இருந்து தயாரிக்க பட்ட பஞ்சகவ்யா நிலத்திற்கு வளம் சேர்க்க கூடியது ” என்கிறார் சுரேஷ் குமார்.விவசாயிகளே எளிதாக குறைந்த விலையில் தயாரிக்க கூடியது தான் பஞ்சகவ்யா. இதனை பயன் படுத்தினால் தற்சார்பு அடைவது நிச்சயம் என்கிறார் அவர்.இதன் மூலம் மண் வளமும் மகசூலும் மேன்படும் என்பதில் ஐயம் இல்லை.


பஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை

.பஞ்சகாவ்யா தெளிக்கும் முறைகரைசல் அதிகம் மற்றும் குறைந்த அளவு செறிவைக் காட்டிலும் 3% கரைசல் மிகவும் பயன்பாடு உள்ளது. ஒவ்வொரு 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை சேர்த்துப் பயன்படுத்தினால் அனைத்து பயிர்களுக்கும் சிறந்தது. 10 லிட்டர் கொள்ளளவு உள்ள மின் தெளிப்பிக்கு 300 மி.லி/நொடி அளவு தேவைப்படும்.மின் தெளிப்பானில் தெளிக்கும் போது வண்டல்கள் கீழே தங்கிவிடும். கைகளால் இயக்கப்படும் தெளிப்பானில் பெரிய துளைமுனை உள்ள தெளிப்பானை பயன்படுத்தவும்.பாய்வு முறைபஞ்சகாவ்யா கரைசலை நீர்ப் பாசன முறையில் 50 லி/ஹெக்டர் என்ற அளவில் கலந்து சொட்டுப்பாசனம் அல்லது பாய்வுப் பாசன முறையில் இதனை பாய்ச்சவும்.

விதை நாற்று நேர்த்திநடவு செய்வதற்கு முன்பு விதைகளை முக்கி வைக்க அல்லது நாற்றுகளை அமுக்கி வைக்க 3% பஞ்சகாவ்யா கரைசல் பயன்படுத்தப்படுகின்றது.20 நிமிடங்கள் முக்கி வைத்தால் போதும்,

 மஞ்சள், பூண்டு மற்றும் கரும்பு வேர்த்துண்டுகளை நடவு செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் இந்தக் கரைசலில் முக்கி வைக்க வேண்டும்.விதை சேமிப்புவிதைகள் உலர்வதற்கு முன்பும், சேமித்து வைப்பதற்கு முன்பும் 3% பஞ்சகாவ்யா கரைசலில் முக்கி வைக்கவும்.

1.முன் பூர்க்கும் பருவம்15 நாட்களுக்கு ஒரு முறை, பயிரின் கால இடைவெளி பொருத்து 2 தெளிப்பு தெளிக்கவும்

2.பூக்கும் மற்றும் இரு புறமும் வெடிகனி பருவம்10 நாட்களுக்கு 2 தெளிப்பு

3.பழம்/இருபுறமும் பழங்கள் வெடித்து முதிர்ச்சி அடையும் பருவம்பழங்கள் வெடித்து முதிர்ச்சி அமையும் போது ஒரு முறை தெளிக்கவும்வெவ்வேறு பயிர்களில் பஞ்சகாவ்யாவை பயன்படுத்தப்படும் காலநிலை

பின்வருமாறுபயிர்கால அட்டவணை

நெல்10,15,30 மற்றும் 50வது நாட்களில் நாற்று நடுவதற்கு முன்பு பயன்படுத்தவு

ம்சூரியகாந்திவிதைத்தபின் 30, 45 மற்றும் 60 வது நாட்களில் தெளிக்கவும்

உளுத்தப்பருப்புமானாவாரி: முதல் பூர்ப்பிற்கும், பூர்த்தி பின் 15 நாட்கள் கழித்தும் பயன்படுத்தவும்நீர்ப்பாசனம்: விதைத்தலுக்கு பின் 15, 25 மற்றும் 40வது நாட்களில் தெளிக்கவு

ம்பச்சைப்பயிறுவிதைத்தலுக்குப் பின் 15, 25, 30, 40 மற்றும் 50 வது நாட்களில் பயன்படுத்தவும்

ஆமணக்குவிதைத்தலுக்குப் பின் 30 மற்றும் 45வது நாட்களில் பயன்படுத்தவு

ம்நிலக்கடலைவிதைத்தலுக்குப் பின் 25 மற்றும் 30வது நாட்களில் பயன்படுத்தவு

ம்வெண்டைவிதைத்தலுக்குப் பின் 30,45, 60 மற்றும் 75வது நாட்களில் பயன்படுத்தவு

ம்முருங்கைபூர்ப்பதற்கு முன்பும் மற்றும் இரு புறமும் வெடிக்கனி உருவாகும் நேரத்திலும் பயன்படுத்தவு

ம்தக்காளிநாற்றங்காலில் இருக்கும் பொழுதும் விதைத்த பின் 40வது நாளிலும் பயன்படுத்தவும் 1% கரைசலில்12மணி நேரத்திற்கு விதை நேர்த்தி செய்ய வேண்டு

ம்வெங்காயம்விதைத்தலுக்கு பின் 0,45 மற்றும் 60வது நாட்களில் பயன்படுத்தவு

ம்ரோஜாகவாத்து செய்யும் போதும், மொட்டுகள் வெளி வரும் போதும் பயன்படுத்தவு

ம்மல்லிகைமொட்டு அரும்பும் போது பயன்படுத்தவும்வனிலாகரணைகளை விதைப்பதற்கு முன் பஞ்சகாவ்யாவில் முக்கி வைக்க வேண்டும்